பெர்த்: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 4.2 ஓவர்களில் 12 ரன்கள் எடுத்த நிலையில், 3 விக்கெட்டுகள் இழந்து தடுமாறி வருகிறது. இதனால் 4வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி எளிதாக வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முழுமையான கட்டுப்பாட்டை தங்களின் கைகளில் வைத்துள்ளது. 2வது நாள் முடிவில் இந்திய அணி 172 ரன்கள் எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் ஜெய்ஸ்வால் - கேஎல் ராகுல் இருவரும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் 77 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் வந்த தேவ்தத் படிக்கல் 25 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது 4வது சதத்தை விளாசி கியரை அதிரடிக்கு திருப்பினார். பின்னர் விராட் கோலியுடன் இணைந்து விரைவாக ரன்களை சேர்க்க, இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இரட்டை சதம் அடிப்பார் என்று பார்க்கப்பட்ட நிலையில், 297 பந்துகளில் 161 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த ரிஷப் பண்ட் மற்றும் துருவ் ஜுரெல் இருவரும் தலா 1 ரன்னில் ஆட்டமிழக்க, வாஷிங்டன் சுந்தர் - விராட் கோலி இருவரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். விராட் கோலி அரைசதம் கடந்து ரன் வேகத்தை அதிகரிக்க, வாஷிங்டன் சுந்தர் 21 ரன்களில் போல்டாகி வெளியேறினார். பின்னர் வந்த நிதீஷ் குமார் ரெட்டி அதிரடியாக ரன்களை குவிக்க தொடங்கினார்.
இதன் மூலமாக இந்திய அணி டிக்ளேர் செய்யும் முடிவுக்கு வந்தது தெரிய வந்தது. இதனையறிந்த விராட் கோலி அதிரடியாக ரன்களை குவித்தது 143 பந்துகளில் 2 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 100 ரன்களை விளாசினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் 30வது சதம் இதுவாகும். பின்னர் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 487 ரன்கள் குவித்த நிலையில், இந்திய அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
இதனால் ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு 534 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதன்பின் ஆஸ்திரேலியா அணியின் உஸ்மான் கவாஜா - மெக்ஸ்வீனி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. பும்ரா வீசிய முதல் ஓவரிலேயே மெக்ஸ்வீனி டக் அவுட்டாகி வெளியேற, திடீரென நைட் வாட்ச்மேனாக பேட் கம்மின்ஸ் களம் புகுந்தார். ஆனால் சிராஜ் வேகத்தில் கம்மின்ஸ் 2 ரன்களில் வீழ்த்தப்பட, வேறு வழியின்றி லபுஷேன் களமிறங்கினார். தொடர்ந்து 5வது ஓவரை வீச பும்ரா வந்தார்.
அந்த ஓவரின் 2வது பந்தில் லபுஷேன் 3 ரன்களில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா அணி 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் 3வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. நாள் முழுவதும் பவுலிங் மற்றும் ஃபீல்டிங் செய்து சோர்வாக இருந்த ஆஸ்திரேலியா வீரர்களை பேட்டிங் ஆட வரவழைத்து விரைவாக விக்கெட் வீழ்த்துவதே திட்டமாக இருந்தது. அதனை பும்ரா - சிராஜ் இருவரும் கச்சிதமாக செயல்படுத்தியுள்ளனர். இதனால் 4வது நாளின் முதல் செஷனிலேயே இந்திய அணி அபார வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.