அடிலெய்டு: இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. 1,031 பந்துகளில் முடிவடைந்திருப்பதால், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் மிகவும் விரைவாக முடிவடைந்த ஆட்டம் என்ற சாதனையும் படைக்கப்பட்டுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 180 ரன்கள் மட்டும் சேர்த்து ஆல் அவுட்டான நிலையில், ஆஸ்திரேலியா அணி ட்ராவிஸ் ஹெட்டின் அபார சதத்தால் 337 ரன்களை குவித்தது. இதனால் முதல் இன்னிங்ஸிலேயே ஆஸ்திரேலியா அணி 157 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 2வது நாள் ஆட்டம் முடிவிலேயே 128 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து ரிஷப் பண்ட் - நிதீஷ் குமார் ரெட்டி இருவரும் 3வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். மிட்சல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே ரிஷப் பண்ட் 28 ரன்களிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் வந்த அஸ்வினும் 7 ரன்களில் வெளியேற, இந்திய அணி 148 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த ஹர்சித் ராணா ஷார்ட் பால்களை எதிர்கொள்ள தடுமாறிய போது, நிதீஷ் குமார் ரெட்டி மட்டும் ஒரு பக்கம் ரன்களை குவித்து வந்தார். பின்னர் ஹர்சித் ராணாவும் டக் அவுட்டாகி வெளியேற, நிதீஷ் குமார் அதிரடியாக விளையாட தொடங்கினார். இதனால் இந்திய அணி முன்னிலை பெற தொடங்கியது.
42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, கம்மின்ஸ் பந்தில் நிதீஷ் குமார் ரெட்டி ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த சிராஜ் 7 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 175 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு 19 ரன்கள் மட்டும் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 3.2 ஓவர்களில் எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலமாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகளில் மிகவும் விரைவாக முடிவடைந்த போட்டி என்ற சாதனையும் படைக்கப்பட்டுள்ளது.