அடிலெய்டு: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்துள்ள நிலையில், அனில் கும்ப்ளே மற்றும் தோனி உள்ளிட்டோரை போல் கேப்டன்சியை ராஜினாமா செய்வாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது இந்திய அணியில் எப்போதும் மிகப்பெரிய மாற்றங்கள் நடக்கும். 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த அனில் கும்ப்ளே திடீரென ஓய்வை அறிவித்தார். அந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டி டிராவில் முடிவடைந்தது.

இதன்பின் 2வது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக அனில் கும்ப்ளே விலக, அவரது இடத்தில் விளையாடிய அமித் மிஸ்ரா சிறப்பாக பவுலிங் செய்தார். அதேபோல் மாற்று கேப்டனாக தோனியும் வெற்றியை தேடி கொடுத்தார். பின்னர் 3வது டெஸ்ட் போட்டியில் கும்ப்ளே அணிக்கு திரும்பிய போதும், மீண்டும் அந்தப் போட்டி டிராவில் முடிந்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது இடத்திற்கான மாற்று வீரர் தயாரான பின் அனில் கும்ப்ளே கொஞ்சம் கூட யோசிக்காமல் ஓய்வை அறிவித்தார். அதேபோல் 2014ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்ற போது, முதல் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக தோனி விளையாடவில்லை. அவரது இடத்தில் கேப்டன்சியை செய்த விராட் கோலி களத்தில் ஆக்ரோஷமாக செயல்பட்டார்.
அதேபோல் விக்கெட் கீப்பராக விருத்திமான் சாஹாவும் அசத்தினார். இதன்பின் 2 மற்றும் 3 ஆகிய டெஸ்ட் போட்டிகளுக்கு தோனி இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்தார். அந்த போட்டிகளிலும் இந்திய அணியால் வெல்ல முடியவில்லை. இதன்பின் திடீரென தோனி ஓய்வை அறிவித்து அதிர்ச்சி கொடுத்து வெளியேறினார்.
அனில் கும்ப்ளே எப்படி தனது இடத்தை நிரப்ப மாற்று வீரர் வந்ததை உணர்ந்தாரோ, அதேபோல் தோனியும் உணர்ந்து ஓய்வை அறிவித்து வெளியேறி சென்றார். இந்த இரு முடிவுகளும் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலனை கொடுத்தது. தற்போது ரோஹித் சர்மா அந்த இடத்தில் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. அவர்களை போலவே ரோஹித் சர்மாவும் முதல் டெஸ்ட் போட்டியை தவறவிட்டுள்ளார்.
அவரது இடத்தில் ஆடிய கேஎல் ராகுலும் சிறப்பாக விளையாடியதோடு, பும்ராவின் கேப்டன்சியும் அட்டகாசமாக இருந்தது. தற்போது ரோஹித் சர்மா மீண்டும் மிடில் ஆர்டரில் களமிறங்கி வருகிறார். அந்த இடத்தில் ஏற்கனவே சர்ஃபராஸ் கான், துருவ் ஜுரெல் உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடி திறமையை நிரூபித்துவிட்டனர். இதனால் ரோஹித் சர்மா சுயநலமாக யோசிக்காமல், ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறவில்லை என்றால், நிச்சயமாக இந்திய அணி நிர்வாகம் பும்ரா தலைமையில் தான் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை எதிர்கொள்ளும். ஏனென்றால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது ரோஹித் சர்மாவின் வயது 38-ஐ எட்டியிருக்கும் என்பதோடு, அவரின் பேட்டிங் டெக்னிக்கும் மோசமாகி வருவது குறிப்பிடத்தக்கது.