சிட்னி: பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியை இந்திய அணி வீழ்த்தும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ஜெய்ஸ்வால் மிகச்சிறந்த இன்னிங்ஸை வெளிப்படுத்தியுள்ளார் என்று பாராட்டிய அவர், இந்திய அணி வெளிநாடுகளில் தரமான அணியாக உருவாகி வருவதாக தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியிலேயே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வென்றிருப்பது அந்நாட்டு ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா ஜாம்பவான்கள் பலரும் 5-0 என்ற ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்று கூறி வந்தனர்.

ஆனால் பெர்த் மைதானத்தில் ஒரு தோல்வியை கூட அடைந்திடாத ஆஸ்திரேலியா அணியை இந்திய அணி வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. இத்தனைக்கும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, அஸ்வின், ஜடேஜா, சுப்மன் கில், முகமது ஷமி என்று சீனியர்கள் பலரும் இல்லை. 2 அறிமுக வீரர்கள் இருந்த போது, சவாலான பெர்த் மைதானத்தில் இந்திய அணி அசாத்தியத்தை நிகழ்த்தி காட்டியுள்ளது.
இந்திய அணி இந்த வெற்றி குறித்து ஆஸ்திரேலியா ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் பேசுகையில், ஆஸ்திரேலியா அணி எத்தனை ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறது? சுமார் 300 ரன்கள். அதனால் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் நிச்சயம் ஏமாற்றத்தில் இருப்பர். இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் ஆடும் போது, பலரும் இந்த முடிவு சரியா என்று என்னிடம் கேள்வி கேட்டனர்.
அப்போது நான், நிச்சயம் டாஸ் வென்று பேட்டிங் ஆடியதே சரி என்று கூறினேன். ஏனென்றால் பெர்த் மைதானத்தில் நடந்த 4 போட்டிகளிலும் முதல் பேட்டிங் செய்த அணியே வென்றிருக்கிறது. அதனால் எப்போதும் ஸ்டாட்ஸ்-களுக்கு மதிப்பளிக்க வேண்டும். இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்டான போதும், அதே பிட்சில் உடனடியாக பவுலிங் செய்யும் வாய்ப்பு அந்த அணிக்கு அமைந்தது.
அதேபோல் பும்ரா, சிராஜ் உள்ளிட்ட 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் நிதீஷ் ரெட்டி அசத்திவிட்டனர். அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒன்றும் அறிமுக வீரராக ஆஸ்திரேலியாவுக்கு வந்து இறங்கவில்லை. அவருக்கான பில்டப் அளிக்கப்பட்டு கொண்டே இருந்தது. அதேபோல் ஜெய்ஸ்வால் மிகவும் திறமையான வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனை 2வது இன்னிங்ஸின் நிரூபித்துவிட்டார்.
முதல் இன்னிங்ஸில் அவரை டக் அவுட்டாகி வெளியேற்றியது நல்ல விஷயம் தான். ஆனால் 2வது இன்னிங்ஸில் அவர் சேர்த்து வைத்து மிரட்டிவிட்டார். அதனால் ஜெய்ஸ்வாலை நிச்சயம் பாராட்ட வேண்டும். அதேபோல் பெர்த் மைதானத்தில் முதல் டெஸ்டை இந்திய அணி வெற்றிபெறும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. பெர்த் மைதானம் அவர்களுக்கு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.
ஆனால் இந்திய அணி தற்போது சொந்த மண்ணில் விளையாடுவதை விடவும் வெளிநாட்டில் சிறந்த அணியாக தெரிகிறது. பெர்த் மைதானத்தில் இந்திய அணி அடைந்த வெற்றி, அது எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் டிச.6ஆம் தேதி தொடங்கவுள்ளது.