அடிலெய்ட்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 180 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய நிதீஷ் குமார் ரெட்டி 42 ரன்களை எடுத்து இந்திய அணியின் மானத்தை காப்பாற்றினார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அடிலெய்ட் மைதானத்தில் முதல் பேட்டிங் ஆடிய அணிகளே அதிக முறை வென்றுள்ளன. இதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இதன்பின் ஜெய்ஸ்வால் - கேஎல் ராகுல் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. மிட்சல் ஸ்டார்க் வீசிய முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி ஆட்டமிழக்க, பின்னர் கேஎல் ராகுல் - சுப்மன் கில் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கேஎல் ராகுல் நிதானமாக விளையாடிய நிலையில், சுப்மன் கில் அதிரடியாக சில பவுண்டரிகளை விளாசி அசத்தினார். புதிய பந்தை இருவரும் மிகச்சிறப்பாக எதிர்கொண்டனர்.
இதன்பின் கேஎல் ராகுலும் அதிரடியாக சில பவுண்டரிகளை விளாசிய நிலையில், 2வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கப்பட்டது. சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் 64 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த விராட் கோலி 7 ரன்களிலும், சுப்மன் கில் 31 ரன்களிலும் அடுத்தடுத்த ஓவர்களிலேயே ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இந்திய அணி 82 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் வந்த கேப்டன் ரோஹித் சர்மா 3 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாட முயன்ற ரிஷப் பண்ட் 21 ரன்களில் வெளியேறினார். இதனால் இந்திய அணி மிகப்பெரிய சிக்கலில் சிக்கியதாக பார்க்கப்பட்டது. இதன்பின் வந்த அஸ்வின் அதிரடியாக 22 ரன்கள் சேர்த்து வெளியேற, கடைசி நேரத்தில் நிதீஷ் குமார் ரெட்டி 54 பந்துகளில் 3 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் மிட்சல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் மற்றும் போலண்ட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனால் இந்திய பவுலர்கள் மிகச்சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் மீண்டும் ஏற்பட்டுள்ளது.