பெர்த்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலமாக பார்டர் கவாஸ்கர் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்று அசத்தியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி பும்ராவின் வேகத்தில் 104 ரன்களுக்கு சுருண்டது. இதனால் 46 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி ம் களமிறங்கியது.

தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால், விராட் கோலியின் அபார சதம் காரணமாக 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 487 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. பின்னர் 3வது நாளின் கடைசி நிமிடங்களில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில் 4வது நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் - கவாஜா கூட்டணி தொடங்கியது.
இதில் 4வது நாளின் 2வது ஓவரிலேயே சிராஜ் வேகத்தில் கவாஜா 4 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் களமிறங்கினார். அவரும் ஸ்டீவ் ஸ்மித்தும் இணைந்து சில மணி நேரம் போராடிய நிலையில், சிராஜின் இன்ஸ்விங்கரில் ஸ்டீவ் ஸ்மித் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் ஹெட் - மிட்சல் மார்ஷ் கூட்டணி இணைந்து அதிரடியாக ரன்களை குவிக்க தொடங்கியது.
6வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் பும்ரா மீண்டும் அட்டாக்கில் வந்து ஹெட் விக்கெட்டை வீழ்த்தினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 89 ரன்களில் ஆட்டமிழக்க, திடீரென நிதீஷ் குமார் ரெட்டி மிட்சல் மார்ஷை 47 ரன்களில் வீழ்த்தி பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். இதன்பின் வந்த அலெக்ஸ் கேரி மட்டும் ஒருமுனையில் போராடினார்.
ஆனால் வாஷிங்டன் சுந்தர் ஸ்பின்னில் மிட்சல் ஸ்டார்க் 12 ரன்களிலும், நேதன் லயன் டக் அவுட்டாகி அடுத்தடுத்து வெளியேறினார். இறுதியாக ஹர்சித் ராணா பவுலிங்கில் அலெக்ஸ் கேரியும் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஆஸ்திரேலியா அணி 238 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன் மூலமாக இந்திய 295 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. அதேபோல் பார்டர் கவாஸ்கர் டிராபியில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.