அடிலெய்ட்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 3 மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் அணிக்கு திரும்பியுள்ளனர்.
பெர்த் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை அச்சுறுத்த வேண்டும் என்று நினைத்த ஆஸ்திரேலியா அணி, பும்ராவின் வேகத்தில் மொத்தமாக சரிந்தது. இதனால் யாரும் எதிர்பாராத வகையில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்று சாதனை படைத்தது.

இந்த நிலையில் 10 நாட்கள் இடைவெளிக்கு பின் 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. அடிலெய்ட் மைதானத்தில் நடக்கவுள்ள இந்த 2வது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடக்கவுள்ளது. கடந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு பயணித்த போது, இந்திய அணி விளையாடிய பகலிரவு டெஸ்ட் போட்டியில் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தது.
இதனால் அடிலெய்ட் மைதானத்தில் நடக்கும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பதிலடி கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். இந்திய அணி வீரர்கள் 3 ஆண்டுகளுக்கு பின் பகலிரவு டெஸ்ட் போட்டியில் களமிறங்கினாலும், அனைவரும் மிகச்சிறந்த ஃபார்மில் உள்ளனர். இதனால் நிச்சயம் ஆஸ்திரேலியா அணிக்கு மிகப்பெரிய சவால் அளிப்பார்கள் என்று பார்க்கப்படுகிறது.
இந்திய பிளேயிங் லெவனை பொறுத்தவரை அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் 3 மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. முதல் டெஸ்ட் போட்டியின் போது கேப்டன் ரோஹித் சர்மா மனைவி ரித்திகாவின் பிரசவம் காரணமாக விடுப்பில் இருந்தார். அதேபோல் இளம் வீரர் சுப்மன் கில் காயம் காரணமாக விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது.
தற்போது ரோஹித் சர்மா இந்திய அணிக்கு திரும்பியுள்ளதால், அவர் நேரடியாக பிளேயிங் லெவனுக்குள் இடம்பிடிப்பார். அதேபோல் சுப்மன் கில் கடந்த 5 நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அவரும் இந்திய பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என்று நம்பலாம். இதன் காரணமாக இளம் வீரர்களான தேவ்தத் படிக்கல் மற்றும் துருவ் ஜுரெல் இருவரும் பெஞ்ச் செய்யப்படுவார்கள் என்று பார்க்கப்படுகிறது.
அதேபோல் அடிலெய்ட் மைதானத்தை பொறுத்தவரை முதல் 2 நாட்களுக்கு பின் ஸ்பின்னர்களால் அதிகளவில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். அதிலும் டாப் ஸ்பின் வீசக் கூடிய ஸ்பின்னர்கள் பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தல் கொடுப்பார்கள் என்பதால், இளம் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக அனுபவ வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பிடிக்க வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் வாஷிங்டன் சுந்தர் இதுவரை பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் விளையாடியதில்லை. அஸ்வினை பொறுத்தவரை பிங்க் பாலில் விளையாடிய அனுபவம் இருப்பதோடு, அடிலெய்ட் மைதானத்திலும் 2 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். பயிற்சி போட்டியிலும் அஸ்வினை இந்திய அணி நிர்வாகம் பவுலிங் செய்ய அனுமதிக்கவில்லை என்பதால், ரசிகர்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.
இந்திய அணியின் பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், ரோஹித் சர்மா (கேப்டன்), நிதீஷ் குமார் ரெட்டி, ரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்சித் ராணா, ஜஸ்பிரிட் பும்ரா, முகமது சிராஜ்