பிரிஸ்பேன்: இந்திய அணி வீரர்களுக்கான பயிற்சியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா கலந்து கொள்ளாததற்கான காரணம் குறித்து ஆஸ்திரேலியா ஜாம்பவான் டேமியன் ஃபிளமிங் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணி வீரர் பும்ரா காயமடைந்ததாக கூறிய அவர், அதனை இந்திய அணி மறைத்து வருவதாகவும் கூறி இருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் களமிறங்குவதற்காக இந்திய அணி வீரர்கள் சிறப்பாக தயாராகி வருகின்றனர். இந்த டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரிட் பும்ராவுக்கு ஓய்வளிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ள நிலையில், ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர் உள்ளிட்டோர் அவர் 5 டெஸ்ட் போட்டிகளிலும் கட்டாயம் விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே அடிலெய்டில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா திடீரென பவுலிங் செய்வதை பாதியிலேயே நிறுத்திவிட்டு மைதானத்தில் கால்களை பிடித்து கொண்டு அமர்ந்தார். பின்னர் பிசியோதெரபிஸ்ட் பார்வையிட்டு சிகிச்சை அளித்த பின், பும்ரா அந்த ஓவரை நிறைவு செய்தார். அதன்பின் பும்ரா பவுலிங் செய்ய வருவாரா என்ற கேள்வி எழுந்தது.
அதன்பின் பும்ராவுக்கு பிடிப்பு ஏற்பட்டதாக சில விளக்கங்கள் அளிக்கப்பட்டது. தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் ஒரேயொரு ஓவரை வீசிய பும்ரா, அந்த ஓவரில் அதிக வேகத்தை காட்டவில்லை. சாதாரணமாக 120 கிமீ வேகத்தில் தான் பும்ராவின் பந்துகள் சென்றன. இதனால் பும்ரா காயமடைந்தாரா என்ற கேள்வி ஆஸ்திரேலியா மீடியாக்களில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து ஆஸ்திரேலியா ஜாம்பவான் டேமியன் ஃபிளமிங் பேசுகையில், பும்ராவின் காயம் குறித்து ஏராளமான சந்தேகங்கள் எழுந்துள்ளது. ஏனென்றால் நேற்று நடைபெற்ற பயிற்சியிலும் துணைக் கேப்டனான பும்ரா கலந்து கொள்ளவில்லை. இதற்கு ஃபிட்னஸ் ஒரு பிரச்சனையாக இருக்கலாம். முகமது சிராஜ் கலந்து கொள்ளாததற்கு அவரின் வேலைப்பளு ஒரு காரணமாக இருக்கலாம்.
ஆனால் பும்ரா 2வது இன்னிங்ஸில் பவுலிங் செய்தது மிகப்பெரிய சந்தேகமாக உள்ளது. எதற்காக அவரை 2வது இன்னிங்ஸில் இந்திய அணி பவுலிங் செய்ய அனுமதித்தது என்று புரியவில்லை. கேப்டன் ரோஹித் சர்மா நினைத்திருந்தால், அதனை எளிதாக தவிர்த்திருக்கலாம். அதேபோல் பும்ரா கால்களை பிடித்து உட்கார்ந்தது சாதாரணமாக வரும் பிடிப்பாக இருக்க வாய்ப்பில்லை.
ஏனென்றால் 81வது ஓவருக்கு பின் அவர் பெரிதாக பவுலிங் செய்யவில்லை. மீண்டும் 2வது இன்னிங்ஸில் பவுலிங் செய்த போது, பும்ராவின் சிக்கல் வெட்ட வெளிச்சமாக தெரிந்துவிட்டது. இதன் மூலமாக பும்ரா காயமடைந்துவிட்டார் என்ற ரகசியத்தை இந்திய அணி நிர்வாகம் அனைவருக்கும் கூறிவிட்டதாக விமர்சித்துள்ளார்.
இந்த டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா 12 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 2024ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக பும்ரா இருக்கும் சூழலில், அவர் காயமடைந்தால் இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.