அடிலெய்ட்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக கேஎல் ராகுல் தான் களமிறங்குவார் என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ஜெய்ஸ்வால் - கேஎல் ராகுல் கூட்டணியை பிரிக்க விரும்பவில்லை என்று கூறிய அவர், இந்த டெஸ்ட் தொடரில் இனி மிடில் ஆர்டரில் களமிறங்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நாளை காலை தொடங்கவுள்ளது. இந்த டெஸ்ட் போட்டிக்கு கேப்டன் ரோஹித் சர்மா திரும்பியுள்ள நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படிக்கல் மற்றும் துருவ் ஜுரெல் இருவருக்கும் பதிலாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் சேர்க்கப்படவுள்ளனர்.

இருந்தாலும் ரோஹித் சர்மா எந்த பேட்டிங் வரிசையில் விளையாடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் பெர்த் டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கேஎல் ராகுல் கூட்டணி இணைந்து 201 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இந்த தொடக்க கூட்டணியை மாற்றக் கூடாது என்று ரசிகர்களும், விமர்சகர்களும் கூறி வந்தனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கேஎல் ராகுல் தான் நிச்சயம் தொடக்க வீரராக செயல்படுவார். இதனால் நான் மிடில் ஆர்டரில் களமிறங்குவேன். கேஎல் ராகுலின் பேட்டிங்கை எனது மகனை கையில் வைத்து கொண்டு வீட்டில் இருந்து பார்த்தேன். அவரின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. அதனால் எந்த மாற்றத்தையும் செய்ய விரும்பவில்லை.
எதிர்காலத்தில் எப்படி வேண்டுமானாலும் பேட்டிங் வரிசை மாறலாம். ஆனால் வெளிநாட்டு பிட்ச்களில் கேஎல் ராகுல் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பெர்த் டெஸ்ட் வெற்றிக்கு ஜெய்ஸ்வாலுடன் இணைந்து கேஎல் ராகுலின் பேட்டிங் மிக முக்கிய பங்கு வகித்தது. திடீரென மிடில் ஆர்டரில் களமிறங்குவது கடினமான விஷயம் தான்.
ஆனால் இந்த முடிவு இந்திய அணியின் நலனை மனதில் வைத்து எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். இதுவரை ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 போட்டிகளில் நம்பர் 5 பேட்ஸ்மேனாக களமிறங்கி இருக்கிறார். அதில் மொத்தமாக 3 அரைசதம் உட்பட 437 ரன்களை சேர்த்துள்ளார். அதேபோல் நம்பர் 6ல் 16 போட்டிகளில் விளையாடி 1,037 ரன்களை விளாசி இருக்கிறார்.