சிட்னி: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜான் புக்கானன் அது குறித்து சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
குறிப்பாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இரண்டுமே வயதான வீரர்களை அதிக அளவில் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார். வயதானவர்களுக்கு இடையே ஆன தொடராக இருக்கும் எனவும், பந்துவீச்சாளர்களுக்கு இடையேயான யுத்தமாக இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இந்திய அணி தற்போது வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் பங்கேற்க உள்ளது. அதற்கு அடுத்து ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. உலகின் இரண்டு சிறந்த டெஸ்ட் அணிகள் மோத உள்ள இந்த தொடருக்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த நான்கு இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களிலும் இந்தியாவே வெற்றி பெற்று உள்ளது. எனவே, ஆஸ்திரேலியா அணி வெறியுடன் உள்ளது. எப்படியாவது இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று தங்களின் புகழை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலிய வீரர்கள் இப்போது இருந்தே பயிற்சி செய்யத் துவங்கி உள்ளனர்.
இதுகுறித்து பேசிய ஜான் புக்கானன், "ஆஸ்திரேலிய அணி கடந்த டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு எதிராக தோல்வி அடைந்ததில் இருந்து தங்களின் வேகப்பந்து வீச்சாளர்களுடன் ஆஃப் ஸ்பின்னர் நாதன் லியோன் மற்றும் பகுதி நேர பந்துவீச்சாளர்களான கேமரான் கிரீன் அல்லது மிட்செல் மார்ஷ்-ஐ பயன்படுத்தி வருகிறார்கள். அதன் மூலம் ஆஸ்திரேலியா மிகவும் சக்தி வாய்ந்த பந்துவீச்சு தாக்குதலை கொண்டுள்ளது." என்றார்.
இந்திய அணி குறித்து பேசுகையில், "இந்தியாவின் டாப் ஆர்டரில் ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, விராட் கோலி, அதன் பின் ஸ்ரேயாஸ் ஆடுவார்கள். அவர்கள் சிறப்பாக ஆடி அதிக ஸ்கோரை எடுக்க வேண்டும். அதன் பின் பும்ரா, ஷமி மற்றும் சிராஜ் தங்கள் பணியை செய்வார்கள்." என்றார்.
"இதற்கு முன் நடந்த போட்டிகள் எல்லாம் முடிந்து விட்டது. அதில் ஆடிய வீரர்கள் எல்லாம் சென்று விட்டார்கள். இப்போது ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளில் இருக்கும் வீரர்கள் அனைவருமே சிறப்பாக ஆட வேண்டும் என்ற நிலையில் இருக்கிறார்கள். இந்திய அணியில் சில வயதான வீரர்களின் வயது என்ன என்பதை நான் பார்த்தேன். ரோஹித் சர்மாவுக்கு 37, விராட் கோலிக்கு 35 வயது ஆகிறது. அஸ்வின் ஆஸ்திரேலியாவுக்கு வரும்போது 37 வயது ஆகி இருக்கும். ஆஸ்திரேலிய அணியை பார்த்தால் இரண்டு வீரர்கள் மட்டுமே 30 வயதுக்கு கீழ் இருக்கிறார்கள்." என்றார் ஜான் புக்கானன்.
மேலும், "இந்தத் தொடர் இரண்டு மிகச் சிறந்த வேகப் வந்து வீச்சு தாக்குதலை கொண்ட அணிகளுக்கு இடையேயான யுத்தமாக இருக்கும். மேலும் இரண்டு அணிகளின் டாப் ஆர்டர் வீரர்கள் எப்படி ஆடுகிறார்கள்? எப்படி பவுன்ஸ் ஆகும் பந்துகளை எதிர்கொள்கிறார்கள்? ஸ்விங் ஆகும் பந்துகளில் எப்படி பகல் இரவு டெஸ்ட் போட்டியில் ஆடப் போகிறார்கள்? என்பதற்கான தொடராகவே இது இருக்கும்." என்றார் ஜான் புக்கானன்.