பெர்த்: இந்திய அணிக்கு தான் விராட் கோலி அனுபவம் மிக முக்கியமாக தேவைப்பட்டது என்று கேப்டன் ஜஸ்பிரிட் பும்ரா தெரிவித்துள்ளார். அதேபோல் விராட் கோலி ஃபார்ம் அவுட்டில் இல்லை என்று கூறிய பும்ரா, வலைப்பயிற்சியில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததாக தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பும்ராவின் பவுலிங், கேஎல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்கம், ரிஷப் பண்ட் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டியின் பங்களிப்பு, இறுதியாக விராட் கோலியின் சதமும் முக்கிய காரணமாக மாறியது.

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் விளாசி மாஸ் கம்பேக்கை கொடுத்துள்ளார். சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மோசமாக விளையாடிய அவர், ஆஸ்திரேலியா மண்ணில் களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் விளாசி சம்பவம் செய்துள்ளார். இதனால் விராட் கோலி மீண்டும் தனது அரியாசனத்தை நோக்கி நடக்க தொடங்கிவிட்டதாக பார்க்கப்படுகிறது.
விராட் கோலியின் சதம் குறித்து இந்திய அணியின் கேப்டன் பும்ரா பேசுகையில், விராட் கோலியை ஒருநாள் ஃபார்ம் அவுட்டில் இருந்து பார்த்ததில்லை. சவாலான பிட்ச்களில் ஒரு பேட்ஸ்மேனின் ஆட்டத்தை பார்த்து அவரின் ஃபார்மை கணிக்க முடியாது. ஏனென்றால் விராட் கோலி வலைப்பயிற்சியில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். அதேபோல் விராட் கோலி எங்களின் உதவி தேவையில்லை.
எங்களுக்கு தான் விராட் கோலியின் அனுபவம் தேவைப்படுகிறது.ஆஸ்திரேலியாவில் விராட் கோலிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் என்று பாராட்டியுள்ளார். தொடர்ந்து, இந்த போட்டியில் முதல் பேட்டிங்கின் போது சில பின்னடைவை சந்தித்தோம். ஆனால் பவுலிங்கில் கம்பேக் கொடுத்தோம். ஏற்கனவே 2018ஆம் ஆண்டு பெர்த் மைதானத்தில் விளையாடி இருக்கிறோம்.
பிட்ச் சாஃப்டாக மாறினாலும், பந்து விரைவாக வரும் என்று தெரியும். அதனால் இளம் வீரர்களிடம் நமது திட்டத்தில் கவனமாக இருந்தால் போதும் என்று தெரிவித்ததாக கூறியுள்ளார். மேலும் அடுத்த போட்டிக்காக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஏற்கனவே ஆஸ்திரேலியா வந்து பயிற்சியை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.