அடிலெய்ட்: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக ரன்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை படைக்கும் வாய்ப்பு இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அடுத்த 3 போட்டிகளில் 283 ரன்களை விளாசினால், சச்சினின் சாதனையை முறியடிக்க முடியும் என்பது தெரிய வந்துள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 161 ரன்களை விளாசியதன் மூலமாக இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை, ஆஸ்திரேலியா மீடியாக்கள் "நியூ கிங்" என்று கொண்டாடி வருகின்றன. சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி வரிசையில் பெர்த் மைதானத்தில் சதமடித்த 4வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதன் காரணமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மீதான மதிப்பு வெளிநாடுகளிலும் உயர்ந்து வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்படி ரன்களை சேர்க்க வேண்டும் என்பதற்கு ஜெய்ஸ்வால் புதிய அணுகுமுறையுடன் செயல்பட்டு வருகிறார். தொடக்கத்தில் நிதானமாக விளையாடினாலும், ஒரேயடியாக அதிரடிக்கு மாறாமல், சில ஓவர்களை மட்டுமே டார்கெட் செய்து ரன்களை குவிக்கிறார்.
இதன் மூலமாக ஜெய்ஸ்வால் ரன் குவிப்பை தடுக்க முடியாமல் எதிரணிகள் திண்டாடி வருகின்றன. இந்த நிலையில் பார்டர் கவாஸ்கர் தொடரின் அடுத்த 3 போட்டிகளில் ஜெய்ஸ்வால் விளையாடும் பட்சத்தில், மிகப்பெரிய சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. நடப்பாண்டில் மட்டும் ஜெய்ஸ்வால் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 சதங்கள் உட்பட 1,280 ரன்களை விளாசி இருக்கிறார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர் என்ற பெருமை சச்சின் டெண்டுல்கர் வசம் உள்ளது. 2010ஆம் ஆண்டு 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் 7 சதங்கள் உட்பட 1,562 ரன்களை விளாசி இருக்கிறார். அவருக்கு பின் 2008 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் சேவாக் 1,462 மற்றும் 1,422 ரன்களை விளாசி இருக்கிறார்.
இந்த நிலையில் அடுத்த 3 போட்டிகளில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 283 ரன்களை விளாசினால், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக ரன்களை விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க முடியும். 24 ஆண்டுகளாக சச்சின் டெண்டுல்கர் விளையாடி உச்சத்தில் இருந்த போது, அடித்த ரன்களை ஜெய்ஸ்வால் தனது முதல் சீசனிலேயே முறியடிக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது.
ஜெய்ஸ்வாலை பொறுத்தவரை சராசரியாக ஒரு போட்டி 106 ரன்களை விளாசி வந்துள்ளார். இதே வேகத்தில் அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜெய்ஸ்வாலால் எளிதாக முறியடிக்க முடியும் என்று பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக ஜெய்ஸ்வால் அடுத்த இந்திய துணைக் கேப்டனுக்கான ரேஸிலும் களமிறங்கும் வாய்ப்பு அமையும்.