அகமதாபாத்: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிகபட்சமாக 3 சதங்கள், 5 அரைசதங்கள் உட்பட 765 ரன்கள் விளாசிய இந்திய வீரர் விராட் கோலிக்கு தொடர் நாயகன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 66 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும் சேர்த்தனர்.

இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 43 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றிபெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 6வது முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதிரடியாக ஆடிய டிராவிஸ் ஹெட் 120 பந்துகளில் 137 ரன்கள் எடுத்து அசத்தினார். சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான தொடர் நாயகன் விருது விராட் கோலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் 3 சதங்கள், 5 அரைசதங்கள் உட்பட 765 ரன்களை விளாசியுள்ளார். உலகக்கோப்பை வரலாற்றிலேயே ஒரே உலகக்கோப்பை தொடரில் 700 ரன்களுக்கு மேல் விளாசிய முதல் வீரர் விராட் கோலி தான்.
தொடர் நாயகன் விருதுக்கான போட்டியில் ஆடம் ஜாம்பா, முகமது ஷமி, விராட் கோலி உள்ளிட்டோர் இருந்த நிலையில், விராட் கோலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரிலும் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்த நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு வழங்கப்பட்டது. தற்போது அதே பாணியில் தோல்வியடைந்த அணியின் வீரருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் சேர்த்த போது விராட் கோலிக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. அதேபோல் 2016ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்காளை விளாசிய போதும், விராட் கோலிக்கு தொடர் நாயகன் விருது அறிவிக்கப்பட்டது. தற்போது நடப்பு உலகக்கோப்பை தொடரிலும் தொடர் நாயகன் விருதை விராட் கோலி வென்றுள்ளார். இதன் மூலம் 3 முறை ஐசிசி தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.