அகமதாபாத்: சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்ற வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்து விராட் கோலி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வை அறிவித்த போது, அவரின் சாதனையை முறியடிக்க வாய்ப்பே இல்லை என்று ரசிகர்கள் கருதினர். ஆனால் சச்சின் டெண்டுல்கரிடம் இதுகுறித்து கேட்ட போது, சாதனைகள் படைக்கப்படுவதே முறியடிக்க தான். எனது சாதனைகளும் நிச்சயம் ஒருநாள் முறியடிக்கப்படும். ஆனால் எனது சாதனைகள் இந்திய வீரர்களால் முறியடிக்கப்பட வேண்டும் என்பதே ஆசை என்று கூறினார்.

சச்சின் சொல்லியதை போலவே இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஒவ்வொரு சாதனையையும் சொல்லி வைத்தது போல் முறியடித்து வருகிறார். அண்மையில் சச்சின் டெண்டுல்கரின் அதிக ஒருநாள் சதங்கள் சாதனையை முறியடித்த விராட் கோலி, அதன்பின் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை முறியடித்தார்.
இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மட்டும் விராட் கோலி 3 சதங்கள், 6 அரைசதங்கள் என்று மொத்தமாக 765 ரன்களை விளாசி தள்ளினார். இதன் காரணமாக உலகக்கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை விராட் கோலி வென்றார். ஏற்கனவே 2 டி20 உலகக்கோப்பை தொடர்களில் அதிக ரன்களை விளாசி தொடர் நாயகன் விருது வென்ற விராட் கோலி, மூன்றாவது முறையாக ஐசிசி தொடரில் தொடர் நாயகன் விருதை கைப்பற்றி சாதனை படைத்தார்.
இந்த நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர் நாயகன் விருது வென்றதன் மூலமாக விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் மற்றொரு சாதனையை முறியடித்துள்ளார். இதுவரை 183 சர்வதேச கிரிக்கெட் தொடரில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர் 20 முறை தொடர் நாயகன் விருதை கைப்பற்றியுள்ளார். அதேபோல் 157 சர்வதேச கிரிக்கெட் தொடரில் விளையாடியுள்ள விராட் கோலி 21வது முறையாக தொடர் நாயகன் விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 21 முறை தொடர் நாயகன் விருதை வென்றுள்ள முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். உலகக்கோப்பை தொடரில் தோல்வியடைந்தாலும், விராட் கோலி பல்வேறு சாதனைகள் படைத்திருப்பது அவரின் ரசிகர்கள் மத்தியில் ஆறுதலை கொடுத்துள்ளது.