அகமதாபாத்: உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 54 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி களமிறங்கியது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் முதல் ஓவரை வீசினார்.

இதில் ரோகித் சர்மா அதிரடியாக ரன்கள் சேர்க்க, மறுமுனையில் நின்ற சுப்மன் கில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரோகித் சர்மா - விராட் கோலி கூட்டணி இணைந்து அதிரடியில் வெளுத்து கட்டியது. ஒரு பக்கம் ரோகித் சர்மா சிக்சர்களாக விளாச, இன்னொரு பக்கம் விராட் கோலி ஸ்டார்க் பந்தில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசி மிரட்டினார். சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனிடையே 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 80 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு பவுண்டரி விளாசிய நிலையில், கம்மின்ஸ் பந்தில் 4 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். இதன்பின் விராட் கோலி - கேஎல் ராகுல் கூட்டணி இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இன்னொரு விக்கெட்டை இழந்தால், சூழல் மோசமாகும் என்பதால் இருவரும் உச்சக்கட்ட கவனத்துடன் விளையாடினர்.
இவர்களை பிரிக்க ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், ஆடம் ஜாம்பா, ஸ்டார்க், ஹேசல்வுட் என்று பவுலர்களை மாற்றி கொண்டே இருந்தார். ஆனால் எதற்கும் விராட் கோலி - கேஎல் ராகுல் கூட்டணி அசரவில்லை. கேஎல் ராகுல் டாட் பால்கள் அதிகம் ஆடுவதை அறிந்து விராட் கோலி, சிறிது ரன்குவிப்பை வேகப்படுத்தினார்.
சிறப்பாக ஆடிய அவர் 56 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி தொடர்ந்து 5வது முறையாக அரைசதம் விளாசி சாதனை படைத்துள்ளார். அதேபோல் இந்த உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி அடிக்கும் 9வது அரைசதம் இதுவாகும். மேலும் 2015ஆம் ஆண்டு தொடர்ச்சியாக 5 அரைசதங்களை விராட் கோலி விளாசியிருந்த நிலையில், தற்போது 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடர்ந்து 5 அரைசதங்கள் அடித்து சாதனை படைத்தார்.
சிறப்பாக விளையாடி வந்த அவர் 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கம்மின்ஸ் பந்தில் போல்டாகி ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 148 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி திடீரென கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறியதால், ஒரு நிமிடம் என்ன நடக்கிறது என்பது புரியாமல் அகமதாபாத் ரசிகர்கள் மொத்தமாக ஸ்டனாகி நின்றனர். இதன் மூலம் 1.3 லட்சம் ரசிகர்களையும் சொன்னதை போல் கம்மின்ஸ் அமைதியாக்கி காட்டினார்.