மும்பை: டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காததற்கு 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை வெற்றி மாடலே காரணமாக பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதியுடன் தோல்வியடைந்து வெளியேறியது. இதன்பின் ஹர்திக் பாண்டியா தலைமையில் டி20 அணி உருவாக்கப்பட்டு, பல்வேறு தொடர்களில் அந்த அணியே விளையாடி வந்தது. ஒருநாள் உலகக்கோப்பை வருவதால் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல் உள்ளிட்டோர் நீக்கப்பட்டதாக பார்க்கப்பட்டது.

ஆனால் உலகக்கோப்பை தொடர் முடிவடைந்தும் சீனியர் வீரர்கள் டி20 கிரிக்கெட் தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை. மீண்டும் இளம் வீரர்களை கொண்ட அணியுடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது. ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக ஓய்வில் இருப்பதால், அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித், கேஎல் ராகுல் உள்ளிட்டோர் நல்ல ஃபார்மில் இருந்தும் அவர்கள் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகக்கோப்பை முடிவடைந்ததால் அவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக பார்க்கப்பட்டாலும், அவர்கள் இனி டி20 கிரிக்கெட் விளையாடுவது சந்தேகம் தான் என்றே தெரிகிறது. இதற்கு தோனியின் கேப்டன்சி மாடல் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
2007ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, ஜாகீர் கான் உள்ளிட்ட எந்த சீனியர் வீரர்களும் இல்லாமல் தென்னாப்பிரிக்காவில் நடந்த முதல் டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது. அதன்பின் இந்திய அணியால் ஒரு முறை கூட டி20 உலகக்கோப்பையை வெல்ல முடியவில்லை.
இதனால் சீனியர்கள் வீரர்களை ஒதுக்கிவிட்டு, ஐபிஎல் தொடரில் அசத்தும், அட்டாக்கிங் ஆடி வரும் இளம் வீரர்களை பிசிசிஐ கண்டறிந்துள்ளது. அவர்களுக்கு என்று பிரத்யேகமாக ரோல் கொடுத்து டி20 அணியை உருவாக்கி வருவதால், இனி சீனியர்கள் அந்த ரோலில் விளையாட வாய்ப்பே இல்லை. ஏனென்றால் ரிங்கு சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ், வாஷிங்டன் சுந்தர், சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில் உள்ளிட்டோரின் இடம் இனி சீனியர் வீரர்களுக்காக மாற்றப்படாது என்றே பார்க்கப்படுகிறது.