கவுகாத்தி: ஆஸ்திரேலியா அணியின் கிளென் மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை வீழ்த்த தவறிவிட்டதாக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மேத்யூ வேட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி ருதுராஜ் கெய்க்வாட்-ன் அதிரடியாக சதத்தால், 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது.

சிறப்பாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 57 பந்துகளில் 123 ரன்களை விளாசி அசத்தினார். இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி கடைசி பந்தில் பவுண்டரியை விளாசியதன் மூலமாக 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ரன்களை விளாசி த்ரில் வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய மேக்ஸ்வெல் 48 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
வான்கடே மைதானத்தில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் எப்படி தனியாளாக ஆஸ்திரேலியா அணியை வெற்றிபெற வைத்தாரோ, அதேபோல் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை வெற்றிபெற வைத்தார். இதன் மூலம் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றார். இதன் மூலமாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 2-1 என்ற நிலையில் உள்ளது.
இந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், மேக்ஸ்வெல் களமிறங்கிய நொடி முதல் அவரின் விக்கெட்டை விரைந்து வீழ்த்துவது தான் எங்களின் திட்டமாக இருந்தது. பனிப்பொழிவு அதிகமாக இருந்த நிலையில், 220 ரன்களை கூட எடுக்க முடியவில்லை என்றால் பவுலர்களுக்கு கூடுதல் சிரமம் ஏற்பட்டிருக்கும். ஆஸ்திரேலியா அணியை அவ்வளவு எளிதில் ஆட்டத்தில் இருந்து புறந்தள்ளிட முடியாது.
டிரிங்ஸ் இடைவேளையில் கூட மேக்ஸ்வெல்லை விரைவாக வீழ்த்த வேண்டும் என்றுதான் பவுலர்களிடம் கூறினேன். ஆனால் அது கடைசி வரை நடக்கவில்லை. 19வது ஓவரை அக்சர் படேலிடம் கொடுத்ததற்கு அவரின் அனுபவமே காரணம். பனிப்பொழிவு இருந்த போதும், அவர் சுழற்பந்துவீச்சாளராக இருந்தாலும் அவரின் அனுபவத்தின் மூலம் ரன்களை கட்டுப்படுத்துவார் என்று நினைத்தோம்.
ருதுராஜ் கெய்க்வாட் எப்போதுமே ஸ்பெஷல் வீரர். நான் ஆட்டமிழந்த பின், அவர் ஆட்டத்தை எடுத்து சென்ற விதம் அற்புதமாக இருந்தது. ஐபிஎல் தொடரின் போதே அவர் ஸ்பெஷல் வீரர் என்று அனைவருக்கும் தெரியும். இன்று மீண்டும் பேட்டிங் மூலமாக நிரூபித்து காட்டிவிட்டார். இந்த போட்டியில் தோல்வியடைந்தாலும், வீரர்களை ஆட்டத்தை எனக்கு பெருமை அளிக்கிறது என்று தெரிவித்தார்.