பெங்களூரு: இந்திய அணியின் இளம் வீரர்கள் அனைவரும் சுதந்திரத்துடன் அச்சமின்றி விளையாடி ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது மகிழ்ச்சியளிப்பதாக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிய ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 37 பந்துகளில் 53 ரன்கள் விளாசினார். அதேபோல் அதிரடியாக ஆடிய அக்சர் படேல் 21 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து அசத்தினார்.

இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் சேர்த்து தோல்வியை சந்தித்தது. இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும். ரவி பிஷ்னாய் மற்றும் அர்ஷ்தீப் சிங் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் டி20 தொடரை வென்று அசத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா அணியை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி முதல் தொடரிலேயே சிறப்பான கேப்டன்சியை மேற்கொண்டுள்ளார் சூர்யகுமார் யாதவ். இந்த வெற்றி குறித்து சூர்யகுமார் யாதவ் பேசுகையில், இந்த டி20 தொடர் சிறப்பான ஒன்றாக அமைந்துள்ளது. இந்திய அணி வீரர்கள் அனைவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அதேபோல் களத்தில் அச்சமின்றி, மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும் என்று தெளிவாக இருந்தோம்.
எங்கள் வீரர்களிடம், உங்களுக்கு எது சரியென்று தெரிகிறதோ, அதை செய்து மகிழ்ச்சியுடன் ஆட்டத்தை ஆடுங்கள் என்று கூறினோம். அவர்களும் அதனை தான் செய்தார்கள். அதுதான் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தால் கூடுதல் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
சின்னசாமி மைதானத்தில் 200 ரன்களுக்கும் அதிகமாக சேர்ப்பதே சாதாரணம் தான். ஆனால் 160 முதல் 175 ரன்கள் என்பது கொஞ்சம் குழப்பமாக இலக்கு தான். ஆனால் 10 ஓவர்களுக்கு பின் வீரர்களிடம் நம்மால் வெற்றிபெற முடியும் என்று நம்பிக்கையுடன் விளையாடியதாக தெரிவித்தார். இந்த போட்டியில் அக்சர் படேல் ஆட்டநாயகன் விருதும், 5 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவி பிஷ்னாய் தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.