அகமதாபாத் : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் யார் சாம்பியன் பட்டத்தை வெல்லப் போகிறார்கள் என்பதற்கான விடை இன்று தெரிந்துவிடும். இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.
இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் போட்டியை யார் வெல்லப் போகிறார்கள் என்பதை ஒரு நான்கு தனிநபர் மோதல்கள் தான் நிர்ணயிக்கப் போகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

கிரிக்கெட் என்பது ஒரு அணியாக ஒருங்கிணைந்து விளையாடும் போட்டியாக இருந்தாலும், இது பேட்ஸ்மேனுக்கும் பவுலருக்கும் இடையே நடக்கும் மனரீதியான மோதல் தான். இந்த மோதலில் யார் வெல்கிறார்களோ அவர்கள் இன்றைய ஆட்டத்தில் வெல்வார்கள். அந்த வகையில் இந்த வெற்றியை தீர்மானிக்கக்கூடிய முதல் மோதல் ரோகித் சர்மாவுக்கும் ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட்டுக்கும் மட்டும்தான் இருக்கிறது. இந்திய அணி அரை இறுதியில் வெற்றி பெற முக்கிய காரணம், ரோகித் சர்மா நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களை சுலபமாக எதிர்கொண்டு அதிரடியை காட்டினார்.
இதன் மூலம் நியூசிலாந்து வீரர்கள் தங்களுடைய உத்வேகத்தை இழந்தனர். இதே போல் இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட்டை அதிரடியாக எதிர் கொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறார். அரையிறுதியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற ஹேசல்வுட்டும் ஸ்டார்க்கும் அபாரமாக செயல்பட்டது காரணம். ஏற்கனவே லீக் சுற்றில் ரோகித் சர்மா விக்கெட்டை ஹேசல்வுட் வீழ்த்தி இருக்கிறார்.
ஸ்டார்க்கும் ரோகித் சர்மாவுக்கும் பல நெருக்கடிகளை கொடுத்திருக்கிறார். இதனால் இந்த இரு வீரர்களின் ரோகித் சர்மா எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பது பொறுத்து இருக்கிறது. இதேபோன்று அடுத்த மோதல் விராட் கோலி மற்றும் ஆடம் சம்பா ஆகியோர் இடையே இருக்கிறது. கோலி சுழற் பந்துவீச்சுக்கு எதிராக சமீப காலமாக தடுமாறுகிறார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை சாம்பா ஓவரில் எட்டு முறை கோலி ஆட்டம் இழந்திருக்கிறார். இதனால் சாம்பாவை கோலி எப்படி எதிர்கொள்கிறார் என்பதை பொறுத்து இன்றைய ஆட்டத்தில் வெற்றி தோல்வி அமைந்திருக்கிறது. இதேபோன்று மேக்ஸ்வெல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இடையிலான போட்டி மிகவும் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும். மேக்ஸ்வெல் சுழற் பந்துவீச்சாளர்களை அடித்து ஆட கூடியவர்.
இதேபோன்று குல்தீப் யாதவும் அதிரடி வீரர்களுக்கு லாடம் கட்ட கூடியவர். இதனால் குல்திப் யாதவ் ஓவரை மேக்ஸ்வெல் எப்படி எதிர்கொள்கிறார் என்பது பொறுத்து நாளை ஆட்டத்தில் வெற்றி தோல்வி இருக்கும். இதேபோன்று டேவிட் வார்னர் மற்றும் பும்ராவுக்கு இடையிலான போட்டி நிச்சயம் ஆர்வத்தை தூண்டும் வகையில் இருக்கும். பும்ரா நடப்பு உலககோப்பை தொடரில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
ஆனால் 14 முறை டேவிட் வார்னர் உடன் பும்ரா விளையாடியும் ஒரு முறை கூட அவருடைய விக்கெட்டை எடுக்கவில்லை. ஆனால் வார்னர் பும்ரா பந்துவீச்சில் 130 பந்துகளை எதிர் கொண்டு 117 ரன்கள் சேர்த்திருக்கிறார்.இன்றைய ஆட்டத்தில் பும்ரா ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களை எவ்வளவு விரைவாக வீழ்த்துகிறாரோ அவ்வளவும் இந்தியாவுக்கு அது நல்லதாகும்.