அகமதாபாத் : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இன்று பல பரிட்சை நடத்துகிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. மதியம் 2 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை டிஸ்னி ஹாட் ஸ்டாரிலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1,2ஆகிய சேனலில் பார்க்கலாம்.
நடப்பு தொடரில் இந்திய அணி விளையாடிய 10 போட்டிகளில் வெற்றி பெற்று தோல்வியை சந்திக்காத அணியாக இறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை லீக் சுற்றில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுடன் தோல்வியை தழுவி மற்ற போட்டிகளில் வென்று இருக்கிறது.

ஆஸ்திரேலிய அணி இதுவரை 8 ஐசிசி தொடரை வென்றிருக்கிறது. இதில் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையை ஐந்து முறை ஆஸ்திரேலியா வென்று இருக்கிறது. இந்திய அணியை பொறுத்தவரை ஐந்து ஐசிசி கோப்பையை இதுவரை வென்றிருக்கிறது. இந்த நிலையில் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் 13 போட்டிகளில் மோதி இருக்கிறது.
இதில் இந்திய அணி 5 போட்டிகளிலும், ஆஸ்திரேலியா அணி 8 போட்டிகளிலும் வெற்றியை பெற்றிருக்கிறார்கள். இதேபோன்று ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் 150 போட்டிகளில் விளையாடியிருக்கிறது. இதில் இந்திய அணி 57 போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணி 83 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. 10 போட்டிகள் முடிவில்லாமல் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
ஆனால் பைனல் என்று வரும்போது அன்றைய நாளில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெற முடியும். இந்திய அணி பேட்டிங் , பந்துவீச்சு, பில்டிங் என மூன்றிலுமே சிறந்து விளையாடினால் மட்டுமே ஆஸ்திரேலிய போன்ற பலம் வாய்ந்த அணியை வீழ்த்த முடியும். ஆஸ்திரேலிய அணிக்கு இறுதிப்போட்டியில் விளையாடிய அனுபவம் நிறையவே இருக்கிறது.
அந்த அணியில் வார்னர், ஸ்மித் மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஸ் போன்ற வீரர்கள் எல்லாம் ஆட்டத்தை தனி ஆளாக மாற்றக் கூடியவர்கள். அதேசமயம் இந்தியாவும் அசுர பலத்தில் இருக்கிறது. இதனால் இறுதிப்போட்டி நிச்சயம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும்.