அகமதாபாத்: ஆஸ்திரேலியா அணியின் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஆடம் ஜாம்பா இருவரையும் சமாளிக்க இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
20 ஆண்டுகளுக்கு பின் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மீண்டும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளது. கடந்த முறை போல் அல்லாமல் இம்முறை இந்திய அணி நிச்சயம் உலகக்கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இதற்காக இந்திய அணி வீரர்கள் அனைவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணியின் பலத்திற்கு ஏற்ப திட்டமிட்டு இந்திய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஏனென்றால் ஆஸ்திரேலியா அணியின் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஆடம் ஜாம்பா இருவரும் தான் அந்த அணியின் முக்கிய துருப்புச்சீட்டாக இருக்கின்றனர். மிட்செல் ஸ்டார்க் 13 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தாலும், அரையிறுதியில் அட்டகாசமான ஃபார்மில் இருந்தார்.
அதேபோல் ஆடம் ஜாம்பா இதுவரை 22 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார். அதேபோல் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியை மட்டும் 8 முறை வீழ்த்தி இருக்கிறார். இதனால் இவர்கள் இருவரையும் எதிர்கொள்ள இந்திய அணி பேட்ஸ்மேன்கள் பயிற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மற்றும் லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக இந்திய அணி பேட்ஸ்மேன்கள் பயிற்சி மேற்கொண்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. அதேபோல் இந்த பயிற்சியின் முதற்கட்டத்தில் ரோகித் சர்மா, இஷான் கிஷன், ஜடேஜா, கேஎல் ராகுல் மற்றும் பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்பின் சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அகமதாபாத் பிட்ச் ஸ்லோவாக இருக்கும் என்பதோடு, பிட்சில் நிச்சயம் ஸ்பின்னர்களுக்கு உதவி இருக்கும். அதேபோல் சரியான லைன் மற்றும் லெந்தில் பிட்ச் செய்தால் நிச்சயம் கொஞ்சம் கூடுதல் பவுன்ஸ் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் பேட்ஸ்மேன்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.