அகமதாபாத் : ஐசிசி உலக கோப்பை வரலாற்றில் இன்று பல்வேறு சாதனைகள் உடைக்கப்பட இருக்கிறது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம். உலகிலேயே கால்பந்துக்குப் பிறகு அதிக மக்களால் பார்க்கக்கூடிய விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான்.
அப்படிப்பட்ட கிரிக்கெட்டில் உலகக்கோப்பை என்பதுதான் பிரதான தொடராக கருதப்படுகிறது. ஒவ்வொரு உலகக்கோப்பை இறுதிப்போட்டியிலும் எவ்வளவு மக்கள் மைதானத்திற்கு வந்து கண்டு கழிக்கிறார்கள் என்ற ரெக்காடும் ஒவ்வொரு விளையாட்டிலும் பின்பற்றப்படும்.

அந்த வகையில் கிரிக்கெட்டில் 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை மெல்போர்னில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 93 ஆயிரம் ரசிகர்கள் கண்டு களித்தார்கள். இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் பல பரிட்சை நடத்தியது. இந்த ரெக்கார்ட் இன்றைய நாளில் முறியடிக்கப்படும் என தெரிகிறது.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஒரு லட்சத்து 32 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் அதிகபட்சம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பார்வையாளர்கள் இன்றைய ஆட்டத்தை காண வருவார்கள் என தெரிகிறது. இதன் மூலம் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இது மிகப்பெரிய சாதனையாக பதிவு செய்யப்படும். கடந்த ஆண்டு கத்தாரில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு கால்பந்து இறுதிப் போட்டியில் 88 ஆயிரத்து 960 பார்வையாளர்கள் மைதானத்தில் வந்து கண்டு களித்தார்கள். அந்த ரெக்கார்டையும் இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று உலகக்கோப்பை வரலாற்றில் இறுதி ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 2003 ஆம் ஆண்டு உலக கோப்பையில் 359 ரன்கள் அடிக்கப்பட்டதே அதிகபட்ச ஸ்கோராகும். இதில் ரிக்கி பாண்டிங் தனியாளாக 140 ரன்கள் அடித்திருந்தார். இந்த ரெக்காடும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்று அதிக ரன்கள் வித்தியாசத்தில் 2003 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இந்தியாவை ஆஸ்திரேலியா 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த ரெக்கார்டும் இன்று முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது.
உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரலாற்றில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் 2007 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட் இலங்கைக்கு எதிராக 149 ரன்கள் அடித்தது அதிகபட்சமாக இருக்கிறது. இந்த ரெக்காடும் இன்று முறியடிக்க வாய்ப்பு உள்ளது. 1979 உலகக் கோப்பை இறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கார்னர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதே இறுதி ஆட்டத்தில் சிறந்த பந்துவீச்சு செயல்பாடாக பார்க்கப்படுகிறது. இதனையும் இன்று ஆட்டத்தில் முறியடிக்கப்படலாம்.