அகமதாபாத்: அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியை ஒரு லட்சம் ரசிகர்கள் கூட நேரில் பார்க்க வராதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றியை பெற்றது. இதன் மூலமாக 6வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலியா அணி வென்று சாதனை படைத்துள்ளது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டாகியது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 43 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய டிராவிஸ் ஹெட் 120 பந்துகளில் 138 ரன்களை விளாசி தள்ளினார். இந்த போட்டியில் வென்றதன் மூலமாக ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ், 1.3 லட்சம் ரசிகர்களையும் அமைதியாக்குவேன் என்ற சவாலில் வென்றுள்ளார்.
இந்த நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியை பார்க்க அகமதாபாத் மைதானத்தில் வந்த ரசிகர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி நவ.19ஆம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் மொத்தமாக 92,453 ரசிகர்கள் போட்டியை நேரில் கண்டு ரசித்துள்ளனர். இதன் மூலம் அதிக ரசிகர்கள் அமர்ந்து பார்க்கப்பட்ட கிரிக்கெட் போட்டி என்ற சாதனையை படைக்க நரேந்திர மோடி மைதானம் தவறியுள்ளது.
ஏனென்றால் 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியை ஆஸ்திரேலியா அணி வென்ற போது, எம்சிஜி மைதானத்தில் மொத்தமாக 93,013 ரசிகர்கள் நேரில் கண்டு ரசித்தனர். இதன் மூலம் அதிக ரசிகர்கள் மைதானத்தில் அமர்ந்து நேரில் கண்டு ரசித்த சாதனை எம்சிஜி மைதானத்தால் தக்க வைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 35 ஆயிரத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் வாங்கப்படவில்லை. இதற்கு பிசிசிஐ-யின் பொறுப்பற்ற செயல்பாடுகளே காரணமாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் உலகக்கோப்பை இறுதிப்போட்டியை காண பயணிக்கும் அனைவரும் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் வரை செலவு செய்ய வேண்டிய சூழலுக்கு பிசிசிஐ தள்ளியது. விமான பயணம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை செலவு செய்யப்பட வேண்டிய நிலைக்கும், உணவு மற்றும் விடுதிகளில் தங்குவதற்கு ரூ. 30 ஆயிரத்திற்கு மேலாகவும் செலவு செய்ய வேண்டிய நிலைக்கு ரசிகர்கள் தள்ளப்பட்டனர்.
இதனால் சாதாரண கிரிக்கெட் ரசிகர்கள் அல்லாமல் பணக்காரர்கள் மட்டுமே நேரில் பார்க்கப்பட்ட போட்டியாக உலகக்கோப்பை இறுதிப்போட்டி அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சாதாரண கிரிக்கெட் ரசிகர்கள் டிக்கெட் வாங்குவதற்கு எளிய வழியான நேரடி டிக்கெட் விற்பனையையும் பிசிசிஐ ரத்து செய்தது. இதன் மூலம் டிக்கெட் விலை லட்சக்கணக்கில் விற்பனை செய்யப்பட்டு, அதிலும் பிசிசிஐ லாபம் பார்த்துள்ளது. அதேபோல் ரசிகர்களுக்கான எந்த வசதியையும் பிசிசிஐ நிர்வாகமும், ஜெய் ஷாவும் கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.