அகமதாபாத்: இந்தியா அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றதற்கு அந்த அணியின் திட்டமிடல் மற்றும் சூழலுக்கு ஏற்ற கம்மின்ஸ்-ன் கேப்டன்சியுமே காரணமாக அமைந்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா அணி 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. லீக் சுற்றின் போது முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா அணி, அதன்பின் தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வென்று இறுதிப்போட்டிக்கு வந்தது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிரான சிறப்பான முன் திட்டமிடலும் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது முதல் சில ஓவர்களிலேயே பார்க்க முடியும்.

ஏனென்றால் ரோகித் சர்மா எத்தனை சிக்சர்கள் அடித்தாலும் பரவாயில்லை என்று 7வது ஓவரிலேயே மேக்ஸ்வெல்லை கொண்டு அட்டாக் செய்தார் கம்மின்ஸ். அவர் மிஸ் ஹிட் செய்ய அதிக வாய்ப்புள்ளதை அறிந்தே மேக்ஸ்வெல்லை பவர் பிளே ஓவர்களிலேயே கம்மின்ஸ் பந்துவீச வைத்தார். அதேபோல் விராட் கோலிக்கு ஷார்ட் பால் லெந்தில் வீசினால் விக்கெட் வீழ்த்தலாம் என்பதை அறிந்து, அதே திட்டத்தை அரங்கேற்றினார்.
ஆனால் அதனை எளிதாக விராட் கோலி சமாளித்து ஆடிய போது, உடனடியாக டீப் ஸ்கொயரில் 2 ஃபீல்டர்கள் வைத்து விராட் கோலியை 2 ரன்கள் எடுக்க முடியாதபடி கட்டுப்படுத்தினார். அதேபோல் ஹேசல்வுட் ஃபுல் லெந்தில் பந்துவீசிய போது, தேர்ட் மேன் மற்றும் ஃபைன் லைக் திசையை ஒரே நேர் கோட்டில் நிறுத்தி பவுண்டரிகளை கட்டுப்படுத்தினார். இதன் விளைவு இந்திய அணியால் பவுண்டரியே விளாச முடியவில்லை.
அதேபோல் டாஸின் போது தைரியமாக சேஸிங்கை தேர்வு செய்தார். அதுமட்டுமல்லாமல் செய்தியாளர்கள் சந்திப்பின் போது 1.3 லட்சம் ரசிகர்களையும் மைதானத்தில் அமைதியாக்குவதில் தான் விளையாட்டின் சுவாரஸ்யம் அடங்கி இருப்பதாக கூறி, மைண்ட் கேமையும் தொடங்கினார். அதேபோல் இந்திய அணியின் ஒவ்வொரு வீரருக்கு எதிராகவும் கம்மின்ஸ் சரியான திட்டத்துடன் தான் களமிறங்கினார்.
சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே தேவையில்லாமல் விக்கெட்டை தாரை வார்த்தனர். மற்ற பேட்ஸ்மேன்களான கேஎல் ராகுல், ஜடேஜா உள்ளிட்டோருக்கு சரியான லெந்தில் 4வது ஸ்டம்ப் லைனில் பந்தை வீசி கொண்டே இருந்து விக்கெட்டை வீழ்த்தி சென்றனர். அதேபோல் சூர்யகுமார் யாதவை கட்டுப்படுத்த கொஞ்சம் கூட பந்தில் வேகத்தை கொடுக்காமல் வீசியது தான் உச்சக்கட்ட திட்டமிடல் என்று சொல்லலாம். இதனிடையே பவுலிங் மாற்றங்கள் எல்லாம் எப்படி முடிவெடுத்தார்கள் என்பதே ஆச்சரியம் தான்.
பேட் மற்றும் பந்துக்கு இடையிலான யுத்தம் தான் கிரிக்கெட் என்றாலும், கிரிக்கெட் என்பது வீரர்களுக்கு இடையிலான மைண்ட் கேம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் கம்மின்ஸ். எந்த வீரருக்கு எதிராக எப்படி செயல்பட வேண்டும், யாருக்கு எந்த பிரச்சனை, மாற்று திட்டம் என்ன என்று ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் பெரிய ஆய்வையே உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன் நடத்தியுள்ளது.