அகமதாபாத் : ஐசிசி உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பந்து வீசும் முடிவை எடுத்திருப்பதற்கு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் விமர்சித்திருக்கிறார்.
எப்போதுமே இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து பெரிய இலக்கை நிர்ணயிக்கும் அணிக்கு இயற்கையாகவே சாதகமாக இருக்கும். ஏனென்றால் இலக்கைத் துரத்தும் போது இறுதிப்போட்டியில் கடும் நெருக்கடி ஏற்படும்.

இந்த நிலையில் அகமதாபாத் ஆடுகளமும் காய்ந்த நிலையில் இருக்கிறது. இது நேரம் போகப் போக இன்னும் தோய்வாக மாறும் என கணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆடுகளம் போகப்போக பேட்டிங்கிற்கு சாதகமாக மாறும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணி கேப்டன் ரிக்கி பாண்டிங், பாட் கம்மின்ஸ், எடுத்த முடிவு தமக்கு ஆச்சரியத்தை கொடுத்திருப்பதாக கூறியுள்ளார்.
2003 ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் இந்தியாவும் இதே போல் ஒரு தவறை செய்ததாக குறிப்பிட்ட ரிக்கி பாண்டிங், அதையே ஆஸ்திரேலியா திரும்பவும் செய்து விட்டதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். பாட் கம்மின்சின் இந்த முடிவிற்கு பனிப்பொழிவு காரணமாக இருக்கலாம் என்று குறிப்பிட்ட ரிக்கி பாண்டிங், ஆனால் பனிப்பொழிவு வருவதற்கு முன்பே மாலை நேரத்தில் மின்னொளியில் பந்து கொஞ்சம் ஸ்விங் ஆக வாய்ப்பு இருப்பதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்திருப்பது நல்ல முடிவாக அமைந்திருக்கும் என்றும் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். இதேபோன்று இந்திய அணியும் ஆடுகளத்தை கருத்தில் கொண்டு மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் வைத்து விளையாடாமல் இருப்பதும் தமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். ஒருவேளை பிளேயிங் லெவனை மாற்றக்கூடாது என்பதற்காக இந்தியா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.