மும்பை: இந்திய அணியுடன் ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்துள்ள நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்த வீரர் நீக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகளில் இந்திய அணி வென்ற நிலையில், 3வது போட்டியில் கிளென் மேக்ஸ்வெல்லின் அபாரமான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா அணி த்ரில் வெற்றியை பெற்று அசத்தியது. இதனால் டி20 தொடர் 2-1 என்ற கணக்கில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி நாளை மறுநாள் ராய்ப்பூரில் நடக்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் ராய்ப்பூரில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்துள்ளார். உலகக்கோப்பை தொடருக்கு பின் சிறிய ஓய்வில் இருந்த அவர், தற்போது மீண்டும் இந்திய அணிக்காக களமிறங்கவுள்ளார்.
கடந்த 3 டி20 போட்டிகளுக்கும் ருதுராஜ் கெய்க்வாட் துணை கேப்டனாக செயல்பட்டு வந்த நிலையில், அடுத்த 2 போட்டிகளுக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாக செயல்பட உள்ளார். இதன் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நிச்சயம் இருப்பார் என்று பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஸ்பின்னர்களை வெளுத்து வாங்கும் திறனால் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்கு கூடுதல் பலமாக இருப்பார்.
இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் 4 அல்லது 5 ஆகிய வரிசையில் களமிறங்கும் பட்சத்தில் எந்த வீரர் பிளேயிங் லெவனில் இருந்து வெளியேற்றப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணியில் டாப் 7 பேட்ஸ்மேன்களில் 5 பேர் இடதுகை பேட்ஸ்மேன்கள் என்பதால், ஏதாவது ஒரு இடதுகை பேட்ஸ்மேனை வெளியேற்றவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.
அதன்படி பார்த்தால், தொடக்க வீரராக விளையாடி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் திலக் வர்மா இருவரில் ஒருவர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடத்தை விட்டுக் கொடுக்க நேரிடும் என்று பார்க்கப்படுகிறது. ஜெய்ஸ்வால் வெளியேற்றப்பட்டால், தொடக்க வீரராக இஷான் கிஷன் களமிறங்குவார். ஒருவேளை திலக் வர்மா நீக்கப்பட்டால், அவரது 5வது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் நேரடியாக விளையாடுவார் என்று பார்க்கப்படுகிறது. இதனால் சூர்யகுமார் யாதவ் என்ன முடிவு செய்யப் போகிறார் என்று ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.