சென்னை : வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் எடுக்க வங்கதேச அணி 149 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்சில் 227 ரன்கள் முன்னிலை உடன் இந்திய அணி களமிறங்கியது.
287 ரன்கள் எடுத்த நிலையில் நான்கு விக்கெட்டுகளை இழந்த போது இந்திய அணி டிக்ளர் செய்தது. இதனை அடுத்து 515 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களம் இறங்கியது. இதில் இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேச அணி கொஞ்சம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அஸ்வின் சூழலில் சிக்கி 234 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

வெற்றிக்கு பிறகு கருத்து தெரிவித்துள்ள இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, நாங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைத்துவிட்டது. நாங்கள் நீண்ட இடைவெளிக்கு பின்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினோம். ஆனால் நாங்கள் கிரிக்கெட்டை விட்டு எங்குமே விலகி சென்றதில்லை. இந்த தொடருக்கு ஒரு வாரத்திற்கு முன்பே நாங்கள் சென்னையில் வந்து பயிற்சி முகாமில் பங்கேற்றோம்.
எங்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது. ரிஷப் பண்ட், தன்னுடைய வாழ்க்கையில் பல நெருக்கடியான சமயங்களை சந்தித்து அதில் இருந்து மீண்டு இருக்கிறார். தன்னை அவர் எப்படி களத்தில் வழி நடத்திக் கொள்கிறார் என்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஐபிஎல் தொடர் மூலம் கிரிக்கெட்டுக்கு மீண்டும் வந்தார். அதன் பிறகு டி20 உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்டார்.
தற்போது அவருக்கு பிடித்த டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி இருக்கிறார். பண்ட் தன்னுடைய ஆட்டத்தை நிரூபிக்க அவருக்கு சில காலம் தேவைப்பட்டது. அதனை நாங்கள் வழங்கினோம். அனைத்து பாராட்டுகளும் ரிஷப் பண்டிற்கு உரியதுதான். டெஸ்ட் போட்டியில் காலடி எடுத்து வைத்த உடன் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டார். கள சூழல் எப்படி இருக்கிறது என்பது பிரச்சனை இல்லை. நாங்கள் அதற்கு ஏற்ற பிளேயிங் லெவனுடன் தான் தயார் செய்து விளையாடுகிறோம்.
கடந்த சில ஆண்டுகளாக ஆடுகளத்திற்கு தேவையான சில பவுலர்கள் எங்களுடைய அணியில் எப்போதும் இருப்பார்கள். எங்கள் அணி வீரர்களுக்கு தான் அனைத்து பாராட்டுகளும் சேர வேண்டும். தேவைப்படும்போது அவர்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து விளையாடி இருக்கிறார்கள். செம்மண் கலந்த ஆடுகளம் எப்போதுமே வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். எனினும் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற உங்களுக்கு பொறுமை மிகவும் அவசியம். இந்த ஆடுகளத்தில் நாம் அதிகப்படியான பொறுமையை வெளிப்படுத்த வேண்டும்.
நாங்கள் பேட்டிங்கிலும் பொறுமையாக இருந்தோம். பந்துவீச்சிலும் பொறுமையாக இருந்தோம். இதன் மூலம் வங்கதேசத்திற்கு எங்களால் நெருக்கடி ஏற்படுத்த முடிந்தது. அஸ்வின் எப்போதுமே பேட் மற்றும் பந்துவீச்சில் எங்களுக்கு உறுதுணையாக இருப்பார்.
அவருடைய பேட்டிங்கை பார்க்கும்போது எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் கிரிக்கெட்டை விட்டு விலகி செல்லவே இல்லை. டிஎன்பிஎல் தொடர் நடைபெற்ற போது கூட அதில் பேட்டிங்கில் அவர் கலக்கியிருந்தார் என்று ரோகித் சர்மா பாராட்டினார்.