புனே : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்னும் சற்று நேரத்தில் இந்தியாவும் வங்கதேச அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒரு காலத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டியில் தான் பரபரப்புக்கும் எதிர்பார்ப்புக்கும் பஞ்சம் இருக்காது.
இரண்டு அணிகளுமே சிறப்பாக விளையாடுவதால் வெற்றி யாருக்கு கிடைக்கும் என்பதை தீர்மானிக்கவே முடியாது. பாகிஸ்தான் அணியின் அனல் பறக்கும் வேகபந்துவீச்சிற்கும், இந்தியாவின் பேட்டிங்கிற்கும் நடக்கும் சண்டையாக தான் கடந்த காலங்களில் இந்த போட்டி இருந்தது.

ஆனால் தற்போது பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவதில்லை. சொல்லப் போனால் இந்தியா பாகிஸ்தான் மோதும் அனைத்து ஒருநாள் போட்டிகளும் இந்தியாவுக்கு சார்பாக ஒரு தலை பட்சமாகவே முடிவு அடைகிறது. கடைசியாக 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் ஒருநாள் கோப்பை இறுதி போட்டியில் தான் பாகிஸ்தான் அணி இந்தியாவை 50 ஓவர் போட்டிகளில் ஜெயித்தது.
அதன் பிறகு இந்தியாவே 50 ஓவர் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு உள்ள முக்கியத்துவம் குறைந்து போகிறது. ஆனால் அரசியல் காரணங்களுக்காக மட்டும் தான் இந்த போட்டிகள் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியா பாகிஸ்தான் போட்டியை மிஞ்சும் அளவிற்கு இந்திய வங்கதேசம் போட்டிகள் இருக்கும். ஏனென்றால் வங்கதேச வீரர்கள் செய்யும் சேட்டைகள் இந்திய வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் செயல்படும்.
இன்னும் சொல்லப்போனால் கடைசியாக இந்தியாவும் வங்கதேசமும் மோதிய மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் வங்கதேசம் அணி தான் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இரு அணிகளும் ஒரு நாள் அல்லது டி20 அல்லது டெஸ்ட் போட்டி என எந்த வடிவத்தில் மோதினாலும் பார்ப்பதற்கு பரபரப்பாக இருக்கும். இதனால் இன்றைய ஆட்டத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஆனால் இன்றைய ஆட்டம் விடுமுறை நாட்களில் வைக்காமல் வார நாட்களில் வைக்கப்பட்டதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.