மும்பை : ஒவ்வொரு அணிகளும் தங்களது சொந்த மண்ணில் பலம் வாய்ந்த அணியாக விளங்கும்.அந்த வகையில் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது என்பது முடியாத காரியமாக ஒரு காலத்தில் கருதப்பட்டது. ஆனால் இதை இந்திய அணி சுக்குநூறாக உடைத்து கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா தொடரை வென்று இருக்கிறது.
இதேபோன்று இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற அணிகளும் தங்களது சொந்த மண்ணில் தோல்வியை தழுவி இருக்கிறது. ஆனால் இந்திய கிரிக்கெட் அணி மட்டும் கடந்த 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் நடைபெறும் ஒரு டெஸ்ட் தொடரை கூட தோற்றது கிடையாது.

ஆஸ்திரேலிய இங்கிலாந்து தென்னாப்பிரிக்கா நியூஸிலாந்து போன்ற அணிகள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என முயற்சித்து தோல்வியே கண்டிருக்கிறது. இந்த சூழலில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மார்ட்டின் குப்தில் இந்தியாவில் விளையாடிய அனுபவம் குறித்து பேசி இருக்கிறார்.
இந்தியாவில் வந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் உங்களால் பலமுறை ரன் குவிக்கவே முடியாது என்ற நினைப்பு உங்களுக்கு தோன்றும். அதுதான் இருப்பதிலேயே கடினமான மனநிலை. பந்து நீங்கள் எதிர்பார்க்காத அளவு திரும்பும். அப்படி பந்து செயல்படும்போது உங்களால் கணித்து ரன்களை சேர்க்கவே முடியாது. எந்த பந்து திரும்பும் எந்த பந்து நேராக வரும் என்பதை கணிக்க முடியாது.
எனவே ஒவ்வொரு பந்தும் நீங்கள் விளையாடும் போது யோசித்துக் கொண்டே இருக்க வேண்டும். மனதளவில் நீங்கள் பலமாக இருந்தால் மட்டுமே இந்திய மண்ணில் உங்களால் சாதிக்க முடியும். இந்தியாவிற்கு எதிராக சொந்த மண்ணில் நீங்கள் சிறப்பாக விளையாடுவது என்பது கடினம் தான். ஆனால் உங்களால் முடியும் என்று நீங்கள் நினைக்கலாம்.
அப்படி முயற்சி செய்ய வேண்டும் என்றால் நீங்கள் முடிந்தவரை நீண்ட நேரம் களத்தில், உங்களது நேரத்தை செலவழித்து விளையாட வேண்டும். இந்திய வானிலை மிகவும் தட்பவெப்பமாக இருக்கும். களத்தில் நிற்கும்போது உங்களுக்கு வியர்த்து கொட்டும். உங்களுக்கு எதிராக பல விஷயங்கள் வரிசை கட்டி நிற்பது போல் உங்களுக்கு தோன்றும்.
அதையும் மீறி நீங்கள் இந்தியாவை வீழ்த்தி விட்டோம் என்று நினைப்பீர்கள்.
ஆனால் திடீரென்று எங்கிருந்தோ வந்து வீரர்கள் ரன்களை சேர்ப்பார்கள். எனவே இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போது கடைசி பந்து வரை போட்டி சவால்கள் நிறைந்ததாக இருக்கும். இந்திய அணி பேட்ஸ்மேன்கள் 199 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டம் இழந்து இருப்பார்கள். அப்பாடா! இந்தியாவை நாம் வீழ்த்தப் போகிறோம் என்று நினைத்தால் திடீரென்று ஜடேஜாவும் அஸ்வினும் களத்திற்கு வந்து ரன்களை சேர்ப்பார்கள் என்று மார்ட்டின் குப்தில் இந்திய அணியை பாராட்டி பேசி இருக்கிறார்.
இந்திய மண்ணில் மார்டின் குப்தில், ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில் மொத்தமாக அவர் 346 ரன்கள் அடித்திருக்கிறார். அதிகபட்ச ஸ்கோர் 85 ரன்கள் ஆகும். மார்ட்டின் குப்தில், இந்திய மண்ணில் மூன்று அரை சதம் அடித்திருக்கிறார். சதம் எதுவும் அடிக்கவில்லை. குப்தில் பேட்டிங் சராசரி இந்திய மண்ணில் வெறும் 24 ரன்கள் என்று அளவிலே இருக்கிறது.