லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஜெய்ஸ்வால் மூன்று கேட்ச் வாய்ப்புகளை கோட்டைவிட்டார். அதிலும் மூன்றாவது முறை, மிக எளிதாக தனது கைகளுக்கு வந்த கேட்ச்சை அவர் தவறவிட்டார். இதைப்பார்த்து அந்த பந்தை வீசிய பும்ரா முகத்தை மூடிக்கொண்டார். மேலும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஓய்வறையில் தனது கையில் இருந்த பந்தை எறிந்தார். அந்த அளவுக்கு ஏமாற்றமும் கோபமும் இந்திய அணியின் கூடாரத்தில் காணப்பட்டது.
இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 471 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தபோது இந்திய அணி சற்று திணறி வந்தது. பும்ரா மட்டுமே மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்தார். ஆனால் அவரது பந்துவீச்சில் மட்டும் நான்கு கேட்ச் வாய்ப்புகள் தவறவிடப்பட்டன. ரவீந்திர ஜடேஜா ஒரு கேட்ச் வாய்ப்பை நழுவவிட்ட நிலையில், ஜெய்ஸ்வால் மூன்று கேட்ச் வாய்ப்புகளை கோட்டைவிட்டார்.

இதுதான் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் ஜெய்ஸ்வால் ஸ்லிப் ஃபீல்டராக இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் ஸ்லிப் ஃபீல்டிங் என்பது மிகவும் முக்கியமானது. பெரும்பாலான விக்கெட்டுகள் ஸ்லிப் ஃபீல்டர்களால் தான் நிகழ்த்தப்படும். மேலும், பந்துவீச்சாளர்களும் ஸ்லிப் ஃபீல்டர்கள் கேட்ச் பிடிக்கும் வகையில் ஆப் சைடில் தான் அதிக பந்துகளை வீசுவார்கள்.
பேட்ஸ்மேன்கள் அந்த பந்துகளை அடிக்க முயற்சி செய்யும்போது சில சமயம் எட்ஜ் ஆகும். இந்த முறை தான் டெஸ்ட் போட்டிகளில் பல ஆண்டுகளாக அனைத்து அணிகளாலும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு உத்தியாக உள்ளது. இந்த அடிப்படை உத்திக்கு ஸ்லிப் ஃபீல்டர்கள் தான் மிகவும் முக்கியம். இந்த நிலையில் தான் ஜெய்ஸ்வால் மூன்று கேட்ச் வாய்ப்புகளை கோட்டைவிட்டார்.
பொதுவாக ஸ்லிப் ஃபீல்டிங்கில் துவக்க வீரர்களைத்தான் நிறுத்துவார்கள். ஏனெனில் அவர்கள் மற்ற இடங்களில் ஃபீல்டிங் செய்தால் அதிக அளவில் ஒவ்வொரு இடத்திற்கும் ஓடியும் மாற வேண்டி இருக்கும். மேலும் அடிக்கடி பந்துகளை துரத்தி ஓட வேண்டி இருக்கும். அதனால் அவர்கள் சோர்வடைந்து விடுவார்கள்.
ஃபீல்டிங் செய்து முடித்த பின் மீண்டும் பேட்டிங் செய்யச் செல்லும்போது அவர்கள் சோர்வாக இருப்பார்கள். அதனால்தான் முதல் மூன்று பேட்ஸ்மேன்களை ஸ்லிப்பில் நிற்க வைப்பார்கள். அதன்படிதான் இந்திய அணியின் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் ஸ்லிப் ஃபீல்டராக இருக்கிறார். ஆனால் இந்த முறை அவர் மிக மோசமான சொதப்பல்களை செய்தது ஏமாற்றத்தை அளித்தது.
முதல் இரண்டு வாய்ப்புகளிலும் பும்ராவின் பந்துவீச்சில் இரண்டு கேட்ச் வாய்ப்புகளை கோட்டைவிட்ட ஜெய்ஸ்வால் மூன்றாவதாகவும் அதேபோல செய்தார். அப்போது பும்ரா தனது முகத்தை மூடிக்கொண்டார். அவர் மிகவும் ஏமாற்றத்தில் இருந்தார். அப்போது பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தனது ஏமாற்றத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தும் வகையில் தனது கையில் இருந்த பந்தை எறிந்தார்.
இந்தப் போட்டியில் பும்ரா ஐந்து விக்கெட் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. நழுவிப் போன கேட்ச் வாய்ப்புகள் சரியாக அமைந்திருந்தால் அவர் இன்னும் கூட அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்க முடியும். பின்னர் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 465 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்த நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.