
சிறப்பான தொடக்கம்
இந்த போட்டிக்கு முன்னதாக சாரல் மழை பெய்திருந்ததால், பந்தில் நல்ல ஸ்விங் இருக்கும் என்றும் பேட்டிங்கிற்கு கடினமானதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதனை பொய்யாக்கினார் ரோகித் சர்மா. வேகப்பந்துவீச்சாளர்களை சமாளிக்க பதற்றமாக இருந்த வீரர்களுக்கு அவரின் பேட்டின் மன உறுதியை கொடுத்தது.

அசத்தல் ஆட்டம்
தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அவர் ரன்களை அவர் உயர்த்தினார். முன்னணி பவுலர்கள் ஆண்டர்சனின் பந்துவீச்சையே அசால்டாக எதிர்கொண்டு பின் வரிசை வீரர்களுக்கு நம்பிக்கை கொடுத்தார். இதனால் வெகு சீக்கிரமாக அரை சதம் அடித்து அசத்தினார். அவர் தொடர்ந்து சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாகவே அவுட்டானார். 145 பந்துகளை எதிர்கொண்ட அவர் 83 ரன்களை விளாசினார். இதில் 11 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும்.

விமர்சனங்கள்
டெஸ்ட் போட்டியில் புதிய மைல்கல்லை அவர் எட்டியுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே ரோகித் சர்மா அச்சுறுத்தும் வீரராக இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் அவரின் செயல்பாடுகள் சற்று மந்தமாகவே இருந்தது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் மட்டும் தான் அவரால் சிறப்பாக செயல்பட முடிகிறது. அயல்நாடுகளில் அவரின் பாட்ஷா பழிக்காது என விமர்சனங்கள் இருந்தது. ஆனால் இங்கிலாந்து தொடரில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

புதிய மைல்கல்
அயல்நாட்டில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் அதிகபட்ச ஸ்கோர் 79 ஆக இருந்தது. 2015ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் அவர் இந்த ஸ்கோரினை அடித்திருந்தார். இன்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 83 ரன்கள் குவித்து, அயல்நாட்டில் தனது அதிகபட்ச ஸ்கோராக இதனைப் பதிவு செய்துள்ளார். 2019ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவ்வபோது ஓப்பனிங் இறங்கி வந்த ரோகித், தற்போது நிரந்த தேர்வாக மாறியுள்ளார்.

என்ன காரணம்
இந்நிலையில் ரோகித்தின் இந்த மாற்றத்திற்கு பின்னால் ரவி சாஸ்திரி இருந்துள்ளார். ரோகித் சர்மா குறித்து மிஷன் டாமினேஷன் என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், கடந்த 2019ம் ஆண்டு ரோகித் சர்மா தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக முதன் முதலில் ஓப்பனிங் களமிறங்கிய போது, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, நான் ரோகித்தை தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக மாற்றி காட்டுகிறேன். இல்லையென்றால் எனது கிரிக்கெட் வாழ்வின் தோல்வி என ஒப்புக்கொள்கிறேன் எனக்கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறைவேறிய சபதம்
அதற்கேற்றார் போல ரவி சாஸ்திரி இன்று தனது சபதத்தில் வென்று காட்டியுள்ளார். தற்போது உலகின் டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் டாப் இடத்தில் உள்ள ஓப்பனிங் வீரர் ரோகித் சர்மா தான். அவர் தரவரிசை பட்டியலில் 6வது இடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவர் இன்னும் முன்னேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications