விசாகப்பட்டினம் : இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை சமன் செய்திருக்கிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியை பெற்றது.
இதனை அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை செய்தது. இதில் இந்திய அணி வீரர்கள் பேட்டிங் படுமோசமாக இருந்தது.

எனினும் தனி ஆளாக நின்ற ஜெய்ஸ்வால் அபாரமாக பேட்டிங் செய்து இரட்டை சதம் அடித்தார். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 396 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடியது. இதில் ஜாக் கிராலி மட்டும் அபாரமாக விளையாடி 76 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொதப்பியதால் அந்த அணி 253 ரன்கள் ஆட்டம் இழந்தது.
இதில் இந்திய தரப்பில் பும்ரா ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனை அடுத்து 143 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இந்திய அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. இதில் கடந்த பத்து இன்னிங்சால் தடுமாறிய கில், இந்த போட்டியில் சதம் அடித்தார். இதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்கள் எடுத்தது. 399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது.
இதில் தொடக்க வீரராக களமிறங்க ஜாக் கிராலி பொறுப்பாக விளையாடிய முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தனர். பென் டக்கட் 28 ரன்களில் ஆட்டமிழக்க ஜாக் கிராலி அபாரமாக நின்று 73 ரன்கள் சேர்த்தார். இதன் பிறகு களம் இறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் அனைவரும் நல்ல தொடக்கத்தை கொடுத்தாலும் அவர்களால் அதனை பெரிய ஸ்கோராக மாற்ற முடியவில்லை.
அஸ்வின் தன்னுடைய அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆலி போப், ஜோ ரூட் ஆகியோரை அடுத்தடுத்து எடுத்தார். இதேபோன்று பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோர் முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை கைப்பற்றினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் 11 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்ரேயாஸ் ஐயரின் அபார ரன் அவுட்டால் பெவிலியன் திரும்பினார். இறுதியில் பென் ஃபோக்ஸ் மற்றும் டாம் ஹார்ட்லி போராடி தலா 36 ரன்களை சேர்த்தனர்.
எனினும் அவர்களால் வெற்றி இலக்கு அருகே கூட செல்ல முடியவில்லை. இதனால் இங்கிலாந்து அணி 292 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்தது. பும்ரா முதல் இன்னிங்சில் ஆறு இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று என மொத்தம் ஒன்பது விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.