
முதல் நாள் முடிவு
இந்திய அணியின் ஓப்பனிங் வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். ரோகித் சர்மா 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 83 ரன்களை அடித்தார். மற்றொரு தொடக்க வீரரான கே.எல்.ராகுல் சதம் விளாசி அசத்தினார். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 126 ரன்களை குவித்தனர். பின்னர் வந்த புஜார மீண்டும் சொதப்ப, 9 ரன்களை மட்டுமே எடுத்தார். பின்னர் வந்த கேப்டன் விராட் கோலி 42 ரன்களுக்கு வெளியேறினார். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 276 ரன்களை சேர்த்தனர்.

2ம் நாள் ஆட்டம்
இந்தியாவுக்கு சாதகமாக ஆட்டம் இருந்த சூழலில் இன்று 2ம் நாள் ஆட்டம் தொடங்கியது. கே.எல்.ராகுல் மற்றும் அஜிங்கியா ரகானே நம்பிக்கையுடன் களமிறங்கினார். ஆனால் ஆட்டத்தின் முதல் 2 ஓவர்களிலேயே நம்பிக்கை தகர்ந்தது. இன்றைய போட்டியின் முதல் ஓவரின் 2வது பந்தை ஒல்லி ராபின்சன் வீச, கே.எல்.ராகுல் அதனை ட்ரைவ் ஷாட் அடிக்க முயன்றார். சிரமமாக முறையில் வந்த அந்த பந்தை நன்கு கைகளை நீட்டி ட்ரைவ் ஷாட் அடிக்க, கவர் திசையில் இருந்த சிப்ளே சுலபமாக பிடித்தார்.

தேவையில்லாத விக்கெட்
ராகுல் வெளியேறினாலும் துணை கேப்டன் அஜிங்கியா ரகானே களத்தில் இருக்கிறார் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் ஆட்டத்தின் 2வது ஓவரில் அதுவும் பொய்யானது. ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய அவுட்சைட் ஆஃப் பந்தை ரகானே அடிக்க முயன்ற போது பேட்டில் எட்ஜாகி கேட்ச் ஆனது. இதனால் 285 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தொடக்கமே இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது.

முதல் இன்னிங்ஸ் முடிவு
இதன் பின்னர் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் - ஜடேஜா ஜோடி நிதானமாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இவர்கள் இருவரின் முயற்சியால் இந்திய அணி 300 ரன்களை கடந்தது. ஆனால் இந்த பார்ட்னர்ஷிப்பும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சிறப்பாக விளையாடி வந்த பண்ட் 37 ரன்களுக்கு வெளியேறினார். முகமது ஷமி டக் அவுட்டானார். இறுதியில் இந்தியாவின் ஸ்கோரை தூக்கி நிறுத்த வேண்டிய முழுப்பொறுப்பும் ஜடேஜாவின் மீது சென்றது. ஒரு புறம் விக்கெட்கள் விழ, மறுமுணையில் ஒற்றை ஆளாக போராடிய ஜடேஜா 40 ரன்கள் குவித்து கடைசி கட்டத்தில் ஸ்கோரை உயர்த்தினார். இதனால் முதல் இன்னிங்ஸில் இந்தியா 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.


Click it and Unblock the Notifications