James Anderson : இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இங்கிலாந்து வீரர்களின் பிளேயிங் லெவனை அந்த அணி 24 மணி நேரத்திற்கு முன்பே அறிவித்திருக்கிறது. முதல் டெஸ்டில் இந்தியாவை வீழ்த்திய நிலையில் இரண்டாவது டெஸ்டில் கடும் நெருக்கடி கொடுக்கும் விதமாக இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.
இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. முதல் டெஸ்டில் களமிறங்கிய அனுபவ சுழற் பந்துவீச்சாளர் ஜாக் லீச் காயம் காரணமாக இரண்டாவது போட்டியில் பங்கேற்கவில்லை. ஜாக் லீச், அனுபவ வீரராக இருந்து முதல் டெஸ்டில் இரண்டு விக்கெட் மட்டுமே மொத்தமாக வீழ்த்தினார்.

எனினும் ரன்களை ஒரு முனையில் இருந்து கட்டுப்படுத்தி மற்ற வீரர்களுக்கு விக்கெட்டுகளை எடுக்க உதவினார். இந்த நிலையில் ஜாக் லீச்சுக்கு பதிலாக அறிமுக வீரர் சோயிப் பஷீர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இவருக்கு முதல் டெஸ்டில் விசா கிடைக்காத காரணத்தினால் பங்கேற்காமல் இருந்தார். இந்த நிலையில் முதல் டெஸ்டில் எந்த விக்கெட்டையும் எடுக்காத மார்க் வுட் அணியிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.
அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஆண்டர்சன் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஆண்டர்சனை கண்டாலே, இந்திய அணி வீரர்கள் பயப்படுவார்கள். ஏனென்றால் இங்கிலாந்து அணியிலேயே அதிக அனுபவம் வாய்ந்த வீரர் என்றால் அது ஆண்டர்சன் தான். இதுவரை இந்தியாவுக்கு ஐந்து முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது ஆறாவது முறையாக விளையாடுகிறார்.
தன்னுடைய ரிவர்ஸ்விங் கலையால் இந்திய வீரர்களுக்கு தண்ணீர் காட்டுவார். கடந்த 2012 ஆம் ஆண்டு இந்திய அணி சொந்த மண்ணில் தோல்வியை தழுவியதற்கு ஆண்டர்சனின் பங்கு மிகவும் முக்கியமாகும். ஆண்டர்சன் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையிலேயே இந்தியாவுக்கு எதிராக தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
இந்தியாவுக்கு எதிராக இதுவரை 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 139 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதில் ஆறு முறை ஐந்து விக்கெட்டுகளை ஆண்டர்சன் வீழ்த்திருக்கிறார். இதேபோன்று சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான இந்திய ஆடுகளத்தில் தன்னுடைய ரிவர்ஸ்விங் கலையால் ஆண்டர்சன் மிரள வைத்திருக்கிறார். இதுவரை இந்தியாவில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்களை ஆண்டர்சன் கைப்பற்றி இருக்கிறார்.
எனினும் இதில் ஒரு முறை கூட ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுகளை எடுக்கவில்லை. ஆண்டர்சனின் பந்து வீச்சு முக்கியமாக வலது கை பேட்ஸ்மன்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும். இவருடைய பந்துவீச்சில் விராட் கோலி அதிக முறை ஆட்டம் இழந்திருக்கிறார். இம்முறை ரோகித் சர்மா, கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆண்டர்சன் கடும் நெருக்கடி ஏற்படுத்துவார் என தெரிகிறது. ஆனால் ஆண்டர்சனுக்கு தற்போது 41 வயது ஆகிவிட்டது.
கடைசியாக நடைபெற்ற ஆசஸ் தொடரில் அவர் சரியாக செயல்படவில்லை. விளையாடிய நான்கு டெஸ்ட் போட்டியில் மொத்தமாகவே ஐந்து விக்கெட் தான் அவர் எடுத்திருந்தார். இதனால் ஆண்டர்சன் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி இருந்தார். எனினும் அடிபட்ட சிங்கத்தின் மூச்சுக்காற்று பலமாக இருக்கும் என்ற வசனத்திற்கு ஏற்ப தற்போது ஆண்டர்சன் கடும் பயிற்சியை எடுத்து மீண்டும் அணியில் இடம் பிடித்திருக்கிறார். ஆண்டர்சன் பழைய பார்மில் இருப்பாரா?
இல்லை ஆசஸ் தொடரில் தடுமாறியது போல் தற்போதும் சொதப்புவாரா என்பதை நாளை தான் பார்க்க முடியும். இந்த இரண்டு மாற்றங்களை தவிர இங்கிலாந்து அணியில் அதே வீரர்கள் தான் களமிறங்குகிறார்கள். ஆண்டர்சன் இன்னும் பத்து விக்கெட்டுகளை எடுத்தால் 700 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேக பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெறுவார்.