
ரோகித்தின் ஆட்டம்
ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக மழை பெய்திருந்ததால், பந்தில் நல்ல ஸ்விங் இருக்கும் என கணிக்கப்பட்டது. எதிர்பார்த்ததை போலவே ஸ்விங்கானது. ஆனால் அதனை அசால்டாக கையாண்டு அசத்தினார் ரோகித் சர்மா. சீரான வேகத்தில் ரன்களை குவித்த அவர், வெகு சீக்கிரமாகவே அரைசதம் கடந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் 83 ரன்களுக்கு வெளியேறினார். இதில் 11 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும்.

ஃபுல் ஃபார்ம்
ரோகித் சர்மா, டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மிகவும் அச்சுறுத்தல் கொடுக்கக்கூடிய வீரர் ஆவார். குறிப்பாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 3 முறை இரட்டை சதங்களை விளாசிய ஒரே வீரர் இவரே ஆகும். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் பெரிய அளவில் ரன்களை குவிக்காமல் இருந்த நிலையில் தற்போது டெஸ்ட் போட்டிகளிலும் நல்ல ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

2 குறைகள்
இப்படி உலகின் தலைசிறந்த வீரராக பார்க்கப்படும் ரோகித் சர்மா மீது, நீண்ட வருடங்களாக 2 குற்றச்சாட்டுக்களை ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர். அதாவது, ரோகித் சர்மா ரன் எடுப்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதாகவும், அவரிடம் ரன் அடிப்பதில் சோம்பேறி தனம் தெரிவதாகவும் குறைக்கூறுகின்றனர்.

விளக்கம்
இந்நிலையில் இதுகுறித்து ரோகித்திடம் வர்ணனையாளர் தினேஷ் கார்த்திக் நேற்று கேள்வி எழுப்பினார். . இதற்கு பதிலளித்த ரோகித் சர்மா, நான் நிறைய நேரம் எடுத்துக்கொள்வதாக மக்கள் கூறுவது தெரியும். ஆனால் அப்படி இல்லை பாஸ். எனக்கு நேரமே இல்லையென்று தான் சொல்ல வேண்டும். பந்துவீச்சாளரை எதிர்கொள்ளும் போது முடிந்த வரை தயாராக தான் இருப்பேன். எந்த ஒரு காரணத்திற்காகவும் அதிக நேரங்களை எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒவ்வொரு பேட்ஸ்மேனும் பந்துவீச்சாளரை எதிர்கொள்ளும் போதும் சிரமங்களை எதிர்கொள்வார். ஆனால் அதனையெல்லாம் மீறி ஒரு சீரான மனநிலை வந்தவுடன் ஷாட் அடிப்பார்கள்.

ஏன் என்று புரியவில்லை
பந்துவீச்சாளர்கள் மிகவும் வேகமாக விக்கெட் எடுக்கக்கூடியவர்கள். அவர்களுக்கு எதிராக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ள கூடாது. டெக்னிக்கலாக ஒரு பேட்ஸ்மேன் பந்தை எதிர்கொள்ள நீண்ட காலம் எடுத்துக்கொள்கிறார் எனக்கூறலாம். ஆனால் பேட்ஸ்மேனுக்கு தேவையான நேரங்கள் கிடைப்பதில்லை என்பதை யாருமே கூறவில்லை. அது ஏன் என்று புரியவில்லை.

சோம்பேறித்தனம்
நாம் ஒரு விளையாட்டு விளையாடுகிறோம் என்றால், அதில் சோம்பேறி தனம் இருக்கக்கூடாது. தொலைக்காட்சிகளில் பார்ப்பதற்கு வேண்டுமானால் சோம்பேறிதனமாக இருப்பது போல தெரியலாம். அப்படி இருந்தால் களத்தில் நாம் சாதிக்க நினைத்ததை எட்டிப்பிடிக்க முடியாது. அதே போல சோம்பேறித்தனமாக இருப்பவர்கள் ஆட்டத்தில் சிறந்து விளங்க முடியாது.

ஆதங்கமான பதில்
பந்துவீச்சாளர்கள் சுமார் 145 கிமீ வேகத்தில் பந்துவீசுவார்கள். அதனை எதிர்த்து நான் புல் ஷாட் ஆடுகிறேன்.அ தில் ஒரு உழைப்பு உள்ளது. சோம்பேறி தனமாக இருந்தால் அந்த ஷாட்களை அடிக்க முடியாது. நான் விளையாட தொடங்கியதில் இருந்து ' ரோகித் சோம்பேறியாக இருக்கிறார்' என்ற வார்த்தையை கேட்டு வருகிறேன். அது ஏன் என எனக்கு புரியவில்லை என ஆதங்கத்துடன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











