மும்பை : கனவுகளை துரத்துங்கள் என்று சச்சின் டெண்டுல்கர் பல வருடங்கள் முன்பு ரசிகர்களிடம் கூறினார். அந்த வகையில் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய அணியில் ஒற்றை இடத்தை பிடிப்பதற்காக தன்னுடைய ரத்தம், வியர்வையை சிந்தி கடுமையாக உழைத்தார் சர்பிராஸ் கான். கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனுக்கு பிறகு அதிக சராசரி வைத்திருந்த வீரர் என்ற பெருமை சப்ராஸ்கானுக்கு கிடைத்திருக்கிறது.
ரஞ்சி கிரிக்கெட்டில் முச்சதம், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக சதம், இந்திய சீனியர் அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் சதம் என தமக்கு கிடைக்கும் வாய்ப்பை மிகக் கச்சிதமாகவே பயன்படுத்தினார் சர்பிராஸ்கான். ஆனால் என்ன காரணத்தினாலோ, சர்பிராஸ் கானுக்கு இந்திய அணியில் இடமே கிடைக்கவில்லை.

விளையாடிய 45 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 14 சதம், 11 அரை சதம் என சர்பிராஸ்கான் 4000 ரன்களை நெருங்குகிறார். இந்த நிலையில் சர்பிராஸ்கான் கொஞ்சம் பருமனாக இருப்பதால்தான் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என கூறப்பட்டது. இதனால் கடும் பயிற்சியை மேற்கொண்ட சர்பிராஸ் கான் ஆறு ஏழு கிலோ வரை குறைத்து அதற்கும் பதில் சொல்லிவிட்டார்.
இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சீனியர் வீரர்கள் கே எல் ராகுல், ஜடேஜா காயம் காரணமாக விலகிய நிலையில் தான் சர்பிராஸ் கானுக்கு இந்த வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியில் இடம் கிடைக்கும் சர்பிராஸ்கான் இன்று காலையில் பயிற்சியை தொடங்கி அதன் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் சர்பிராஸ் கானுக்கு முசிர் கான் என்ற ஒரு சகோதரரும் இருக்கிறார். அண்டர் 19 கிரிக்கெட்டில் தற்போது முசிர் கான் விளையாடி வருகிறார். அண்மையில் அயர்லாந்துக்கு எதிரான U19 உலகக்கோப்பை போட்டியில் முசிர் கான் சதம் அடித்தார். தனது தம்பியை குறித்து பேசிய சர்பிராஸ்கான், என்னுடைய தம்பி என்னை விட சிறந்த பேட்ஸ்மேன் ஆக இருக்கிறார்.
நான் என்னுடைய தம்பி என்பதால் இதை கூறவில்லை. சில சமயம் நான் பேட்டிங் செய்யும்போது தடுமாறுவேன். ஆனால் என் தம்பியின் கிரிக்கெட் யுத்தியை பார்க்கும் போதும் அவருடைய பயிற்சியை பார்க்கும் போதும் எனக்கு தன்னம்பிக்கை பிறக்கும். களத்தில் அவர் நடந்து கொள்ளும் விதம் ரன் அடிக்கும் விதம் அனைத்துமே நன்றாக இருக்கும்.
நான் சில சமயம் சரியாக பேட்டிங் விளையாடவில்லை என்றால் என் தம்பியை பார்த்து தான் நான் கற்றுக்கொள்வேன். நான் பயிற்சியில் இருக்கும்போது, 300 பந்துகளை பிடித்தால் என்னுடைய தம்பி முஷீர் கானும் 300 பந்துகளை பேட்டிங் பிடித்து விளையாடுவார். அதே சமயம் அவர் பந்தையும் வீசுவார். நானும் என்னுடைய இரண்டாவது தம்பியும் பயிற்சி செய்யும் போது அதை பார்த்து முசிர் கானும் பயிற்சியில் ஈடுபடுவார். என்னுடைய ரிவர்ஸ் ஸ்வீப்பை விட முசீர் கானின் ரிவர்ஸ் ஸ்வீப் இன்னும் நன்றாக இருக்கும்.
ஆனால் ஸ்வீப் செய்வதில் நான் நன்றாக விளையாடுவேன். ஏனென்றால் எனக்கு அனுபவம் இருக்கிறது. நான் என் தம்பி நன்றாக விளையாட வேண்டும் என்றும், என் தம்பி நான் நன்றாக விளையாட வேண்டும் என்றும் நினைப்போம். அவர் பந்து வீசும் போது நான் பேட்டிங் செய்வேன். எங்களுக்குள் ஒரு ஆரோக்கியமான போட்டி எப்போதுமே இருக்கிறது என்று கூறியுள்ளார். தனது தம்பி முசிர் கானை பற்றி சர்பிராஸ் கான் பேசி வருவதை வானத்தைப்போல படத்தில் வரும் அண்ணன் விஜயகாந்தோடு ஒப்பிட்டு ரசிகர்கள் நெகிழ்ந்து வருகிறார்கள்.