பண்ட்-ன் அதிரடி
முதல் இன்னிங்ஸின் போது இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் 98 ரன்களுக்கெல்லாம் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்போது இந்திய அணியை ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி தான் அதிரடி பேட்டிங்கால் காப்பாற்றினர். ரிஷப் பண்ட் 146 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 104 ரன்களையும் அடித்து அசத்தினர்.
புதிய மைல்கல்
இதன் மூலம் ரிஷப் பண்ட் தோனியின் சாதனையை உடைத்திருந்தார். அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த விக்கெட் கீப்பராக தோனி இருந்துவந்தார். 2005ம் ஆண்டு அவர் 93 பந்துகளில் சதமடித்தார். ஆனால் ரிஷப் பண்ட் தற்போது 89 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்தார்.
சச்சினை முந்திய பண்ட்
இந்நிலையில் இத்துடன் சேர்த்து சச்சின் டெண்டுல்கர் சாதனையையும் பண்ட் முறியடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் மிகக்குறைந்த
வயதில் 100 சிக்ஸர்களை அடித்தவர் என்ற பெருமையை பண்ட் பெற்றுள்ளார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் 25 வயதில் இந்த மைல்கல்லை எட்டினார். ஆனால் ரிஷப் பண்ட் 24 வயதிலேயே படைத்துவிட்டார். இப்பட்டியலில் சுரேஷ் ரெய்னா 25 வயது, 7 நாட்களில் 100 சிக்ஸர் அடித்து 3வது இடத்தில் உள்ளார்.
இந்திய அணி எழுச்சி
ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் அதிரடி சதத்தால் 98 - 5 என இருந்த அணியின் ஸ்கோர், 416 - 10 என பெரும் உட்சத்தை தொட்டது. கடைசி நேரத்தில் இந்திய அணி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா 16 பந்துகளில் 31 ரன்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.