மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜெய்ஷ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தி இருக்கிறார். இதன் மூலம் ஒரே தொடரில் இரண்டு இரட்டை சதம் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் படைத்திருக்கிறார்.
இந்த நிலையில் போட்டி முடிந்த பிறகு ஜெய்ஸ்வாலிடம் பிரபல கிரிக்கெட் வீரர் அணில் கும்ப்ளே ஒரு கோரிக்கையை வைத்திருந்தார். அது குறித்து தற்போது பார்க்கலாம். ஜெய்ஸ்வாலிடம் பேசிய அணில் கும்ப்ளே, உங்களுடைய பேட்டிங்கை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

சிறப்பாக செயல்பட்டு இருக்கிறீர்கள்! ஆனால் உங்களிடம் நான் ஒரு விஷயத்தை கூற விரும்புகிறேன். அதை நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும். நீங்கள் நல்ல சுழற் பந்து வீசுவீர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களுக்கு இயற்கையாகவே சுழற் பந்து வீச வருகிறது. எனவே சுழற் பந்து வீசும் அந்த பழக்கத்தை விட்டு விடாதீர்கள்.
ஏனென்றால் உங்களுக்கு சுழற் பந்துவீச்சு எப்போதாவது கை கொடுக்கும். உங்களுக்கு முதுகு வலி இருக்கிறது என்று எனக்கு தெரியும். எனினும் சுழற் பந்துவீச்சு குறித்து நீங்கள் கடுமையான உழைப்பை எடுத்து வந்தால் கேப்டனிடம் சென்று நான் பந்து வீசுகிறேன் எனக்கு கொஞ்சம் ஓவர் கொடுங்கள் என்று கேளுங்கள் என அணில் கும்ப்ளே ஜெய்ஸ்வாலுக்கு கோரிக்கை வைத்தார்.
இதனைக் கேட்ட ஜெய்ஸ்வால் கண்டிப்பாக சார் நான் தினமும் சுழற் பந்துவீச்சுக்கு பயிற்சி செய்து வருகிறேன். தொடர்ந்து பந்துகளை வீசுவேன். நான் ரோகித் சர்மாவிடம் ஏற்கனவே பேசி இருக்கிறேன். அவரும் என்னை தயாராக இருக்கும்படி கூறியிருக்கிறார். இதனால் நான் பந்து வீசுவதை நிறுத்த மாட்டேன் என்று ஜெய்ஸ்வால் கூறியிருக்கிறார்.
அணில் கும்ப்ளேவின் இந்த கோரிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஒரு காலத்தில் ஷேவாக், சச்சின் என அனைத்து முன்வரிசை வீரர்களுமே பந்து வீசுவார்கள். ஆனால் தற்போது எந்த பேட்ஸ்மேன்களுக்கும் பந்து வீச வருவதில்லை. இதனால் ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் சுழற் பந்து வீச்சிலும் கவனம் செலுத்தினால் நிச்சயம் அது இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை தரும்.