தர்மசாலா : இந்தியா, இங்கிலாந்து அணிக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 7ஆம் தேதி தொடங்குகிறது. நான்கு போட்டி முடிவடைந்த நிலையில் இந்திய அணி மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இருக்கிறது.
இந்த நிலையில் ஐந்தாவது டெஸ்டிலும் சீனியர் வீரர்கள் விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்ப மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்திய அணியின் பிளேயிங் லெவனில் என்ன மாற்றம் நிகழப்போகிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

இந்த தொடரில் இளம் வீரர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய இடத்தை உறுதி செய்து கொள்ள மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. அதில் ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் துருவ் ஜூரல், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப் போன்ற வீரர்கள் எல்லாம் ஜொலித்தார்கள். ஆனால் ஒரு வீரர் மட்டும் தமக்கு கிடைத்த தங்கமான வாய்ப்பை வீணடித்து விட்டார்.
இதனால் ஐந்தாவது டெஸ்டில் அவர் அதிரடியாக நீக்கப்பட்டு புதிய வீரருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடுபவர் ரஜத் பட்டிதார். 30 வயதான இவருக்கு தற்போது தான் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இந்தத் தொடரில் ரஜத் பட்டிதார் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஆறு இன்னிங்ஸில் பேட்டிங் செய்தார்.
ஆனால் மொத்தமாகவே அவர் 63 ரன்கள் தான் அடித்திருக்கிறார். இது அதிகபட்சம் 32 ரன்கள் ஆகும். சராசரி 10.500 என்ற மோசமான அளவில் இருக்கிறது. ரஜத் பட்டிதார் இந்த போட்டியிலாவது அடித்து விடுவார் என ஒவ்வொரு போட்டியிலும் எதிர்பார்த்து இந்திய அணி நிர்வாகமும் ஏமாற்றம் அடைந்திருக்கிறது. இதனால் தர்மசாலாவில் நடைபெறும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரஜத் பட்டிதார் அதிரடியாக நீக்கப்படுவார் என தெரிகிறது.
அவருக்கு பதில் முன்னாள் ஆர்சிபி வீரரும், தற்போது ஐபிஎலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் டேவுதட் படிக்கல் பிளேயிங் லெவனில் சேர்க்க டிராவிட் முடிவெடுத்திருக்கிறார். தேவ்தத் படிக்கல் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக அபாரமாக விளையாடி சதம் அடித்திருக்கிறார் மேலும் ரஞ்சி கிரிக்கெட்டிலும் நல்ல சராசரியை வைத்திருக்கிறார். இதனால் நடு வரிசையில் அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.