Dhruv Jurel : இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் துருவ் ஜூரல். 23 வயதான இவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினார். தற்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பராக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுகிறார்.
இந்த நிலையில் தாம் விளையாடிய இரண்டாவது டெஸ்டிலே இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்று இருக்கிறார். இவர் முதல் இன்னிங்சில் 90 ரன்கள் அடித்ததன் காரணமாக தான் இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் அருகே வரை இந்தியாவால் வர முடிந்தது. இதேபோன்று இரண்டாவது இன்னிங்ஸிலும் 39 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.

ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் நாங்கள் சூழலுக்கு தகுந்த மாதிரி விளையாடினோம். முதல் இன்னிங்சிலும் நான் அவ்வாறு தான் விளையாடினேன். முதல் இன்னிங்சில் விளையாடும்போது நாம் இப்போது எவ்வளவு அதிக ரன் அடிக்கிறோமோ அந்த அளவு இரண்டாவது இன்னிங்ஸில் குறைந்த இலக்கையே நமக்கு வரும் என்று எனக்கு தெரியும்.
அதனால் தான் முதலில் சூழலுக்கு தகுந்தார் போல் விளையாடினேன். முதல் இன்னிங்ஸில் விக்கெட்டுகள் சரிந்த போது நான் கீழ் வரிசை பேட்ஸ்மேனுடன் விளையாட நேரிட்டது. அவர்களுடன் நல்ல ஒரு பார்ட்னர்ஷிப்பை அமைத்தேன். எனவே இந்த பாராட்டுக்கள் என்னை மட்டும் சேராது. அவர்களுக்கும் கிடைக்க வேண்டும். ஆண்டர்சன், மார்க் வுட் போன்ற வீரர்களை எல்லாம் இன்று டெஸ்ட் தொடரில் எதிர்கொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
ஏனென்றால் நான் அவர்களை எல்லாம் டிவியில் தான் பார்த்திருக்கிறேன். நான் ஒவ்வொரு பந்திலும் கவனம் செலுத்தி அதன் பிறகு விளையாடுவேன். பந்தை தான் பார்ப்பேனே தவிர பவுலர்களை பார்க்க மாட்டேன். இந்தப் போட்டியில் நானும் கில்லும் விளையாடும் போது பத்து, பத்து ரன்களாக இலக்கை பிரித்துக் கொண்டு அதன் பிறகு ஆட்டத்தை கட்டமைத்து விளையாடினோம் என்று துருவ் ஜூரல் கூறியுள்ளார்.