லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டத்தில் பந்துவீச்சில் தடுமாறி வந்தது. இந்த நிலையில், மூன்றாவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் இரண்டு விக்கெட்டுகளை இந்திய அணி அடுத்தடுத்து வீழ்த்தியது. இதன் பின்னணியில் இந்திய அணி செய்த ஒரு மாற்றத்தை கிரிக்கெட் விமர்சகர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் சேர்த்த நிலையில், இங்கிலாந்து அணி 209 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்த நிலையில் இருந்தது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை இரண்டாவது நாளன்று தொடங்கியபோது, இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் பந்துவீசச் செல்லும் முன் தங்களின் தொப்பியை பெரும்பாலும் ஸ்லிப் ஃபீல்டிங்கில் நின்று கொண்டிருந்த கருண் நாயரிடம் வழங்கினர்.

கருண் நாயர் அதை வாங்கி அம்பயரிடம் கொடுத்தார். இது ஒவ்வொரு ஓவரிலும் ஒரு நடைமுறையாகவே இருந்தது. முதல் நாள் அன்று பும்ரா மட்டுமே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த நிலையில் மூன்றாவது நாள் அன்று இந்த நடைமுறையில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. பவுண்டரி எல்லை அருகே இந்திய அணியின் த்ரோடவுன் ஸ்பெஷலிஸ்ட் ரகு அமர்ந்திருந்தார்.
பந்துவீச்சாளர்கள் ரகுவிடம் ஓடிச் சென்று தனது தொப்பியை வழங்கிவிட்டு மீண்டும் ஓடி வந்தனர். இது பந்துவீச்சாளர்களுக்கு கூடுதல் சுமையாக இருந்தாலும், இதில் தான் முக்கிய விஷயம் இருக்கிறது என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
அதாவது, ஒவ்வொரு இங்கிலாந்து பேட்ஸ்மேனுக்கும் இருக்கும் பலவீனங்கள் அல்லது அவர் இதற்கு முந்தைய ஓவரில் செய்த தவறுகள் ஆகியவற்றை இந்திய அணியின் பயிற்சியாளர் குழு ஆய்வு செய்து, அதை ரகு மூலமாக பந்துவீச்சாளர்களுக்குச் சொல்வார்கள். ரகு அதை அடுத்த ஓவர் பந்துவீசச் செல்லும் பந்துவீச்சாளருக்குச் சொல்வார்.
இது அதிகபட்சம் ஒன்று அல்லது இரண்டு வரிகளில் சொல்லப்படும் எளிதான தகவல் பரிமாற்றமாகவே இருக்கும். ஒரு ஃபீல்டர் எந்த காரணமும் இன்றி ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரி எல்லை அருகே ஓடிச் சென்று இதை கேட்டு வர முடியாது. எனவேதான், பந்துவீச்சாளர் தொப்பியை கொடுக்கச் செல்வது போல ஓடிச் சென்று இந்த தகவலை நேரடியாகவே கேட்டு வந்தனர். முதல் சில ஓவர்கள் வரை இந்த நடைமுறை நீடித்தது.
இந்த உத்தி பலனும் அளித்தது. பிரசித் கிருஷ்ணா சதம் அடித்திருந்த ஓலி போப் விக்கெட்டை வீழ்த்தினார். போப் 106 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்ததாக, முகமது சிராஜ் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார். ஸ்டோக்ஸ் 52 பந்துகளில் 20 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி 276 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது.