மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர்கள் நால்வரின் பிசிசிஐ ஒப்பந்தம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. இதன் பின்னணியில் கேப்டன் ரோஹித் சர்மா இருக்கலாம் என கூறப்படுகிறது.
2023 - 2024ஆம் ஆண்டிற்கான பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் டெஸ்ட் அணியின் மூத்த வீரர் புஜாரா பெயர் இடம் பெறவில்லை. அடுத்து சுழற் பந்துவீச்சாளர் சாஹல் பெயரும் நீக்கப்பட்டு இருந்தது.

சமீபத்தில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சொல்லியும், உள்ளூர் டெஸ்ட் தொடரில் ஆட மறுத்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் பெயரும் நீக்கப்பட்டு இருக்கிறது. இவர்கள் நால்வருமே ஏதோ ஒரு வகையில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அணி நிர்வாகத்துக்கு எதிராகவோ அல்லது அவர்களுக்கு அதிருப்தி அளிக்கும் வகையிலோ செயல்பட்டவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
புஜாரா டெஸ்ட் அணியின் மூத்த வீரராக இருந்தும், ரஹானேவுக்கு பின் அவருக்கு துணை கேப்டன் பதவி அளிக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக பும்ராவுக்கு டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவி அளிக்கப்பட்டது. அதன் பின் புஜாரா படிப்படியாக டெஸ்ட் அணியில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு தற்போது நிரந்தரமாக டெஸ்ட் அணியில் இருந்தே நீக்கப்பட்டு இருக்கிறார். பிசிசிஐ ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. அவர் துணை கேப்டன் பதவி கிடைக்கவில்லை என்ற அதிருப்தியை வெளிப்படுத்தியதால் ஓரங்கட்டப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
அடுத்து யுஸ்வேந்திர சாஹல், சிறந்த சுழற் பந்துவீச்சாளராக இருந்தும், நல்ல ஃபார்மில் இருந்தும், அணியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. அதன் பின்னணியில் அவர் அணிக்குள் சில மூத்த வீரர்களை பற்றி தேவையில்லாத வகையில் பேசி இருக்கலாம் என ஹர்பஜன் சிங் ஒரு முறை கூறி இருந்தார். அதன் காரணமாக அவருக்கு தற்போது பிசிசிஐ ஒப்பந்தம் கிடைக்காமல் போய் இருக்கலாம்.
அதை அடுத்து இஷான் கிஷன் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனக்கு போட்டிகளில் களமிறங்க வாய்ப்பு அளிக்கவில்லை என்பதால் பாதி தொடரில் விலகியதாக கூறப்படுகிறது. அதன் பின்னரும் இஷான் கிஷனை அணியில் சேர்க்க ராகுல் டிராவிட் தயாராக இருந்தார். ஆனால், உள்ளூர் டெஸ்ட் தொடரில் ஆடுமாறு அவர் கூறியதை இஷான் கிஷன் கேட்கவில்லை. இப்படி கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் பேச்சை மதிக்காமல் நடந்து கொண்ட இஷான் கிஷன் பிசிசிஐ ஒப்பந்தத்தை இழந்து இருக்கிறார்.
அதே போல ஸ்ரேயாஸ் ஐயர் சரியாக ரன் குவிக்காததால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் பாதியில் நீக்கப்பட்டார். அவரையும் உள்ளூர் டெஸ்ட் தொடரில் ஆடுமாறு கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கேட்டுக் கொண்ட போதும் அவர் அதை செய்யவில்லை. அதை அடுத்து அவருக்கும் பிசிசிஐ ஒப்பந்தம் மறுக்கப்பட்டு இருக்கிறது.