R Ashwin : இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஒரு சரித்திர சாதனையை படைத்திருக்கிறார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருக்கிறது.
இதனால் இந்த போட்டியில் இந்தியா வென்றால் தொடரை கைப்பற்றி விடலாம். இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் சிறப்பான உத்வேகத்துடன் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார்கள். அறிமுக வீரராக களமிறங்கிய ஆகாஷ் தீப் அபாரமாக பந்து வீசி அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இங்கிலாந்து தொடக்க வீரர் மற்றும் ஆலி போப் ஆகியோரின் விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்திய ஆகாஷ் தீப், தொடக்கவீரர் ஜாக் கிராலி விக்கெட்டையும் கைப்பற்றினார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 57 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதை அடுத்து அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் ஜோ ரூட் மற்றும் ஜானி பாரிஸ்டோ ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர்.
ஒரு முனையில் ஜானி பாரிஸ்டோ தன்னுடைய அதிரடியை காட்டினார். அவர் சிராஜ் மற்றும் அஸ்வின் பந்துகளை பவுண்டரிகளை அடித்து ரன்களை சேர்த்தார். இதனால் இங்கிலாந்து அணி இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்தப் போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்த போதுதான் ஆட்டத்தின் 22 ஆவது ஓவரின் அஸ்வின் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.
அஸ்வின் ஓவரை ஜானி பாரிஸ்டோ அதிரடியாக விளையாடி வந்த நிலையில், திடீரென்று ஒரு ஸ்வீப் சாட்டை ஆட முயன்றார். ஆனால் பந்து பேட்டில் மிஸ் செய்து காலில் பட்டது. இதனை அடுத்து அஸ்வின் அவுட் கேட்டார். ஆனால் இதற்கு நடுவர் அவுட் வழங்கவில்லை. இதனை அடுத்து டி ஆர் எஸ் முடிவை ரோகித் சர்மா கேட்க அதன் பிறகு இது அவுட் என தெரிய வந்தது.
இதனை அடுத்து பாரிஸ்டோ, 38 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிராக அஸ்வின் மிகப்பெரிய சாதனை ஒன்றை செய்திருக்கிறார். அதாவது இங்கிலாந்துக்கு எதிராக அஸ்வின் வீழ்த்திய நூறாவது விக்கெட் இதுவாகும். இதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிராக பேட்டிங்கில் ஆயிரம் ரன்கள், 100 விக்கெட் எடுத்த ஒரே இந்தியன் என்ற பெருமையை அஸ்வின் பெற்றிருக்கிறார். அது மட்டுமல்லாமல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணியிடம் இத்தகைய சாதனையை படைத்த ஏழாவது வீரர் மற்றும் ஒரே இந்தியன் என்ற பெருமையும் அஸ்வினுக்கு கிடைத்தது.