
வலுவான நிலையில் இந்தியா
இதனையடுத்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 3வது நாளான ஆட்டத்தின் போது சிறப்பான சம்பவத்தை செய்தது. முதல் இன்னிங்ஸை போலவே சுலபமாக சுருண்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதனை மாற்றி அமைத்தது ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் ஜோடி. ராகுல் 46 ரன்களுக்கு வெளியேறிய போது மறுமுனையில் தூண் போல் நிலைத்து நின்ற ரோகித் சர்மா, இங்கிலாந்து அணி பந்துவீச்சை அடுத்தடுத்து பவுண்டரிகளுக்கு அனுப்பி அவர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு நம்பிக்கை அளித்தார். இதனால் நேற்றைய ஆட்டத்தின் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 8வது சதத்தை பூர்த்தி செய்தார்.

ஸ்பெஷல் சதம்
இந்த சதமானது ரோகித் சர்மாவுக்கு மிக முக்கியமான ஒன்று. அதாவது டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரராக கலக்கி வந்த ரோகித், டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வந்தார். குறிப்பாக அயல்நாட்டில் ஒரு சதம் கூட அடிக்காமல் இருந்து வந்தார். இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுப்பப்பட்டு நீண்ட நாட்களாக மிடில் ஆர்டரில் களமிறக்கப்பட்டு வந்தார். இங்கிலாந்து தொடரில் தான் அவர் மீது நம்பிக்கை வைத்து ஓப்பனிங் களமிறங்க வாய்ப்பளிக்கப்பட்டது.

ரோகித் விளக்கம்
இந்நிலையில் தனது சதம் குறித்து பேசிய ரோகித் சர்மா, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தான் என்னை நிரூபிப்பதற்கான கடைசி வாய்ப்பு. வேறு பேட்டிங் ஆர்டரில் களமிறங்கி வந்த எனக்கு ஓப்பனிங் இறங்க அற்புத வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இதனை சரியாக பயன்படுத்தாவிட்டால், டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் இனி ஓப்பனிங் இடம் பெறுவது கடினம் என அணி நிர்வாகத்திடம் இருந்து எனக்கு தகவல் வந்தது.

எனக்கு ஆச்சரியம் இல்லை
நான் இதற்கு முன்னர் மிடில் ஆர்டரில் களமிறங்கி வந்தேன். ஆனால் நான் எதிர்பார்த்தபடி எதுவுமே நடந்ததில்லை. இது எனது கடைசி வாய்ப்பு. எனவே அணி நிர்வாகமும், என்னை என்ன வேண்டுமானாலும் முயற்சி செய்து பார்க்கும்படி அனுப்பிவிட்டது. எனவே இந்த சதத்தை ஒரு ஆச்சரியமாக நான் பார்க்கவில்லை. ஏனென்றால், என்ன நடந்தாலும், ஃபார்மை நிரூபித்துவிட வேண்டும் என்ற முடிவுடன் தான் நான் வந்தேன் என நெகிழ்ச்சியுடன் கூறினார்.


Click it and Unblock the Notifications











