கட்டாக்: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை சமூக வலைதளங்களில் மோசமாக கிண்டல் செய்து வருகின்றனர். சமீப காலமாக அவரது பேட்டிங் ஃபார்ம் பாதாளத்தை நோக்கி சரிந்து இருக்கிறது. இந்த நிலையில் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்றார்.
முன்னதாக நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் அவர் சரியாக ரன் குவிக்காமல் சொதப்பி இருந்தார். இதை அடுத்து ரஞ்சி டிராபி தொடரில் விளையாடினார். அதிலும் அவர் இரண்டு இன்னிங்ஸ்களில் 31 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இந்த நிலையில் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியை வழிநடத்த வேண்டிய முக்கியமான கட்டத்தில் தனது பேட்டிங் ஃபார்மை மீட்கும் கடைசி முயற்சியில் இறங்கினார் ரோஹித் சர்மா. இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவரது பேட்டிங் ஃபார்மை மீட்டால் மட்டுமே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அணிக்கு சுமையாக இல்லாமல் விளையாட முடியும்.
ஆனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 7 பந்துகளை சந்தித்து 2 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார் ரோஹித் சர்மா. இதை அடுத்து ரோஹித்தை மிக மோசமாக கேலி செய்து வருகின்றனர் ரசிகர்கள்.
ஒருநாள் போட்டியில் ஆடினாலும், டெஸ்ட் போட்டியில் ஆடினாலும் அவுட் ஆவார். பவர் பிளேவுக்கு உள்ளே ஆடினாலும், பவர் பிளேவுக்கு வெளியில் ஆடினாலும் ரன் குவிக்க மாட்டார். இந்திய மண்ணில் விளையாடினாலும் சரி அல்லது வெளிநாடுகளில் விளையாடினாலும் சரி எப்போதும் ரன் சேர்க்க மாட்டார் என கேலி செய்து வருகின்றனர்.
மேலும், சுயநலமற்ற முறையில் விளையாடி வரும் ரோஹித் சர்மா இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டி தனது விக்கெட்டை விரைவாக இழந்து வருகிறார் எனவும் கிண்டல் செய்து இருக்கின்றனர்.