ராஞ்சி : இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் சர்பராஸ் கான் செய்த தவறை உடனடியாக கேப்டன் ரோகித் சர்மா திட்டி திருத்திய சம்பவம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்களும் இந்திய அணி 37 ரன்களும் எடுத்தது. இதனை அடுத்து 46 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி விளையாடியது.

அப்போது இங்கிலாந்து தங்களுடைய பேஸ் பால் திட்டத்தை செயல்படுத்தி மிகப்பெரிய இலக்கை இந்தியாவுக்கு நிர்ணயிக்கப் போகிறது என்று இந்திய ரசிகர்கள் பயந்தனர். ஆனால் மிகப்பெரிய டிவிஸ்ட் ஒன்றை இந்திய வீரர்கள் கொடுத்தார்கள். தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
இந்த நிலையில் விரைவாக விக்கெட் எடுக்க வேண்டும் என்பதற்காக இந்திய வீரர்கள் பிரமாதமாக பீல்டிங் செய்தனர். அப்போது இளம் வீரர் சர்பராஸ் கான் பேட்ஸ்மேனுக்கு அருகே பீல்டிங்கில் நிற்கவைக்கப்பட்டார். இளங்கன்று பயம் அறியாது என்பதற்கு ஏற்றார் வகையில் சர்பராஸ் கான் ஹெல்மெட் அணியாமல் பேட்ஸ்மேனுக்கு அருகே போய் நின்றார்.

இதனை பார்த்த கேப்டன் ரோகித் சர்மா உடனடியாக சர்பராஸ் கானை அழைத்து திட்டினார். ஹீரோ போல் நடந்துகொள்ள முயற்சி செய்யாதே! ஹெல்மெட் மாட்டிக் கொள் என்று அவர் கூறினார். மேலும் மாற்று வீரரை அழைத்து சர்பராஸ் கானுக்கு ஹெல்மெட் கொண்டு வாருங்கள் என்றும் ரோஹித் சர்மா சைகையில் காட்டினார். இதனை அடுத்து சர்பராஸ் கானுக்கு ஒரு ஹெல்மெட் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு தான் பந்து வீசப்பட்டது.
ரோகித் சர்மாவின் இந்த செயல் ரசிகர்களால் பாராட்டப்பட்டு இருக்கிறது. பல இளம் வீரர்கள் இதுபோன்று கவனக்குறைவால் பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தாமல் அவர்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையே முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனால் சர்பராஸ் போன்ற திறமையான வீரர்கள் இந்தியாவின் எதிர்காலத்திற்கு முக்கியம் என்பதை உணர்ந்த ரோகித் சர்மா இது போல் இளங்கன்றுகள் தவறை செய்து விடக்கூடாது என்பதை தட்டிக் கேட்டு களத்திலேயே அவருடைய தவறை திருத்திய சம்பவம் பாராட்டை பெற்றிருக்கிறது.