ராஜ்காட் : இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாக விளையாடி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இங்கிலாந்து அணி பேஸ் பால் என்ற ஒரு யுக்தியை கடைப்பிடித்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. .
எவ்வளவு பெரிய இமாலய இலக்கை கொடுத்தாலும் அந்த இலக்கை விரைவாக டி20 கிரிக்கெட்டில் ஆடுவது போல் இங்கிலாந்து அணி வீரர்கள் விளையாடி வருகிறார்கள். இந்த நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இதில் ரோகித் சர்மா, ஜடேஜா மற்றும் சர்பிராஸ் கான் ஆகியோரின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 445 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து இங்கிலாந்து அணி தற்போது இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்துள்ளது. இதில் பென் டக்கட் தற்போது 133 ரன்கள் விளாசி களத்தில் இருக்கிறார்.
இந்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 500 ரன்களுக்கு மேல் அடித்திருந்தால் அது தற்போது மிகப்பெரிய பலமாக இருந்திருக்கும். இதனால் தான் ரோகித் சர்மா, சர்பிராஸ் ரன் அவுட் ஆனவுடன் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்த நிலையில் இந்திய அணி 500 ரன்கள் அடிக்காமல் போனதற்கு கில், ஜெய்ஸ்வால் மற்றும் ரஜத் பட்டிதார் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததே காரணம்.
ஜெய்ஸ்வால் 10 ரன்களில் ஆட்டம் இழக்க ரஜத் பட்டிதார் ஐந்து ரன்களிலும், கில் டக் அவுட் ஆகியும் வெளியேறினார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த கில் இந்த டெஸ்டில் ரன் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஏமாற்றினார். இந்த நிலையில் இந்திய அணி கீழ் வரிசை வீரர்கள் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அபாரமாக விளையாடிய பும்ரா 28 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தார். இதில் மூன்று பவுண்டரி,ஒரு சிக்சர் அடங்கும்.
அப்போது கில் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் பெவிலியனில் இருந்து பும்ரா விளையாடுவதை பார்த்து வந்தனர். அப்போது ரோகித் சர்மா கில்லை திரும்பி உன்னை விட பும்ரா நன்றாக விளையாடுகிறார் என்று கூறி அவரை கிண்டல் செய்து இருக்கிறார். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் பும்ரா ஆடிய விதத்தையும் ரோகித் சர்மா கில்லிடம் சொல்லிக்காட்டி கிண்டல் செய்திருக்கிறார்.இந்திய அணியின் முக்கிய வீரராக கருதப்படும் கில் கடந்த டெஸ்டில் தான் சதம் அடித்து தப்பித்தார். தற்போது மீண்டும் டக் அவுட் ஆகி இருப்பது ரசிகர்களை மட்டுமல்ல ரோகித் சர்மாவையும் கடுப்படைய செய்துள்ளது. இதனால் தான் கிடைத்த கேப்பில் அவர் கெடா வெட்டி இருக்கிறார்.