ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஸ்பின்னர் ஷாபாஸ் நதீம் தனது 34 வயதில் ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்து இருக்கிறார். இரண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடிய ஷாபாஸ் நதீம் இனி இந்திய அணியில் வாய்ப்பே கிடைக்காது என்பதால் தான் ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர வைத்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் 2019இல் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ராஞ்சி டெஸ்ட் போட்டியில் ஷாபாஸ் நதீம் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகம் ஆனார். தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே வெறும் 17.2 ஓவர்கள் பந்து வீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார் ஷாபாஸ் நதீம். ஆனால், அவரது சொந்த ஊரில் நடைபெற்ற அந்த போட்டிக்கு பின் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதனால் ஷாபாஸ் பெரும் ஏமாற்றம் அடைந்தார்.

எனினும், உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி ட்ராபியில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்தார். பின்னர் 2021இல் இங்கிலாந்து அணிக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்தப் போட்டியிலும் 4 விக்கெட்கள் வீழ்த்தினார் ஷாபாஸ். ஆனால், அதன் பின்னும் அவருக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
மிகவும் சோர்ந்து போன ஷாபாஸ் நதீம் தனது வாய்ப்புக்காக காத்திருந்தார். தற்போது நடந்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி அவரது சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற்றது. 2019 போல அவரது சொந்த ஊரில் நடக்கும் போட்டியிலாவது தனக்கு வாய்ப்பு கிடைக்குமா? என எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில் 2024 ரஞ்சி தொடர் முடிவடைந்துள்ள நிலையில் ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்து இருக்கிறார்.
ஷாபாஸ் நதீம் இதுவரை முதல் தர டெஸ்டில் 140 போட்டிகளில் 542 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். 134 உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் ஆடி 175 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். 150 டி20 போட்டிகளில் ஆடி 125 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார்.
இந்திய அணியின் அடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா இல்லை.. இவர்தான்.. பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்
இனி உலகம் முழுவதும் நடைபெற உள்ள டி20 தொடர்களில் பங்கேற்க இருப்பதாக அறிவித்து இருக்கிறார். வெளிநாட்டு டி20 தொடர்களில் பங்கேற்கும் எந்த இந்திய வீரரும், பிசிசிஐ கட்டுப்பாட்டில் நடைபெறும் எந்த கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.