கட்டாக்: இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ரோஹித் சர்மாவை புகழ்ந்து தள்ளி இருக்கிறார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி சதம் அடித்தார். அது அவரது 32வது ஒருநாள் போட்டி சதமாக அமைந்தது.
இந்தப் போட்டியின் முடிவில் பேசிய சுரேஷ் ரெய்னா, அடுத்து மூன்றாவது ஒருநாள் போட்டி நடக்க உள்ள அகமதாபாத்தில் ரோஹித் சர்மா 33வது சதம் அடிப்பார் எனக் கூறியிருக்கிறார். இது பற்றி சுரேஷ் ரெய்னா பேசுகையில், "33வது செஞ்சுரி அகமதாபாத்தில் வந்து கொண்டு இருக்கிறது. ரோஹித் சர்மா மூன்றாவது போட்டியிலும் சதம் அடிப்பார்." என்றார். இதை ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும், "பெரிய வீரர்கள் இப்படித்தான் ஆடுவார்கள். கட்டாக்கில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா அடித்த சிக்ஸர்கள் அற்புதமாக இருந்தன. நான் இந்தப் போட்டிக்கு முன் பேசிய போது, "இது ரோஹித் சர்மாவின் நாள் என்று" கூறினேன். அவர் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என்பதை இந்தப் போட்டியில் வெளிப்படுத்தினார்" என்றார்.
இந்திய அணி பிப்ரவரி 12 அன்று அகமதாபாத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் விளையாட உள்ளது. இந்தப் போட்டியில் தான் ரோஹித் சர்மா சதம் அடிப்பார் என சுரேஷ் ரெய்னா உறுதியாக கூறியிருக்கிறார்.
முன்னதாக ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருந்தது. டெஸ்ட் போட்டிகளில் அவரால் ரன் குவிக்க முடியவில்லை. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சொதப்பிய அவர், உள்நாட்டு டெஸ்ட் தொடரான ரஞ்சி டிராபியிலும் 33 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியிலும் 2 ரன் மட்டுமே எடுத்தார். இந்த நிலையில்தான் இரண்டாவது ஒருநாள் போட்டியில் அதிரடியாக ஆடி 119 ரன்கள் குவித்தார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 304 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி ரோஹித் சர்மா 90 பந்துகளில் 119 ரன்கள் எடுத்து அரங்கத்தை அதிர வைத்தார். அவரது ஆட்டத்தால் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது.