மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது பல வீரர்கள் காயம் காரணமாக விலகி இருப்பது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதல் டெஸ்டில் இந்திய அணி 19 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி பெரிய இலக்கை இந்தியாவுக்கு நிர்ணயித்தது.

இதனை எதிர்கொள்ள முடியாமல் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே இந்திய அணியில் முகமது சமி, விராட் கோலி போன்ற அனுபவ வீரர்கள் விலகிய நிலையில் தற்போது முதல் டெஸ்டில் நன்றாக விளையாடிய கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜா இருவரும் காயம் காரணமாக விலகி இருக்கிறார்கள்.
இது இந்தியாவுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மாற்றுவீரராக சர்பிராஸ் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே அணியில் ரஜத் பட்டிதார் உள்ள நிலையில் இவ்விரண்டு வீரர்கள் யார் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது ஜடேஜா விலகி இருப்பதால் அவருக்கு பதில் யார் விளையாட போகிறார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் குல்தீப் யாதவ் தான். தன்னுடைய இடது கை லெக் ஸ்பின் பந்து வீச்சால் இங்கிலாந்து வீரர்களுக்கு கடும் நெருக்கடியை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடியிருக்கிறார். ஆனால் அதன் பிறகு அவருக்கு போதிய வாய்ப்பு அணியில் கிடைக்கவில்லை.
இதனால் ஜடேஜா இடத்தில் குல்தீப் விளையாட அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் வாஷிங்டன் சுந்தர். வாஷிங்டன் சுந்தர் ஒரு ஆல் ரவுண்டர் என்பதால் பிளேயிங் லெவனின் இவர் இணைந்தால் பேட்டிங் வரிசை பலமாகும். இதனால் இவருக்கும் ஒரு வாய்ப்பு இருக்கிறது
இதேபோன்று சௌரப் குமாரும் இதுவரை ரஞ்சிப் போட்டியில் 290 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
இவர் ஏற்கனவே இந்திய அணியில் சேர்க்கப்பட்டாலும் இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை. சமீபத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான நான்கு நாள் பயிற்சி ஆட்டத்தில் சௌரப் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்படி மூன்று வீரர்களுமே வாய்ப்புக்காக போட்டி போடுவதால் யாருக்கு இடம் கிடைக்கும் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.